Saturday, 16 May 2020

நின்ற சீர் நெடுமாற நாயனார்

தினம் ஒரு அடியார் 48:

நின்ற சீர் நெடுமாற நாயனார்:

முடிவுடை வேந்தர்களில் காலத்தால் பழமையான, பழம்பெறும் வேந்தரான பாண்டிய மரபில் தோன்றியவர் இந்நாயன்மார். 
இவரது பூசைநாள்: ஐப்பசி பரணி
இவரின் காலம் கி.பி(640-690) முழுமையாக ஐம்பது ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தியுள்ளார். சீனப்பயணியான யுவான்சுவாங் தன் பயணக்குறிப்பில் அரிகேசிபாண்டியனையும் அவர்தந்தை செழியன் சேந்தனையும் குறாப்பிடுகிறார். களப்பிரரிடமிருந்து தமிழ்நாட்டை மீட்ட கடுங்கோன் பாண்டியனின் பேரனின் மகன் இவர்.இவரது இயற்பெயர் சேந்தன்மாறன் என்றும் அரிகேசரி நெடுமாறன் என்றும் அறியப்படுகிறது. சம்பந்தர் தம் பதிகங்களின் வாயிலாக, 'பஞ்சவன் தென்னன் பாண்டியர்'
'பங்கமில் தென்னன் பாண்டியர்'
'பார்த்திபன் தென்னன் பாண்டியர்' என்றும் இவரை அழைக்கிறார். தமிழோடு தொடர்புடையது பாண்டிய குலம் என்பதனை உணர்த்த 'தமிழ்ப்பாண்டியர்' என்றும் அழைக்கிறார்.
 திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் மட்டுமே இவரை 'கூன்பாண்டியன்' என அழைக்கிறார். 
அகப்பொருள் சிற்றிலக்கியங்களில் காலத்தால் முற்ப்பட்ட 'பாண்டியன்கோவை'யின் பாட்டுடைத்தலைவன் இம்மன்னனே! 
இப்பாடல்களின் வாயிலாய் காவிரிக்கு தெற்கே குமரிவரை இவரது நாடு பரவியிருந்ததும் இருபத்தைந்து இடங்களில் இவன் போர்நடத்தி வெற்றி கண்டுள்ளமையும் தெரிய வருகிறது! 
பல்லவர், சேரன் முதலியோரை முறையே சங்கைமங்கை,நெல்வேலி ஆகிய இடங்களில் பெருவெற்றி பெருகிறான்.
நெடுமாறன் காலத்தில் வாழ்ந்த சோழமன்னன் பெயர் 'மணிமுடிசோழன்' என அறியமுடிகிறது. சேரனது வஞ்சியோடு சோழனது உறந்தையும் வென்றான் என பாண்டியக்கோவை கூறுகிறது.

"கோழியும் வானவன் வஞ்சியும் கொண்டவன்" 

என்ற பாடல் வாயிலாய் அறியலாம். பாண்டியனிடம் தோற்ற சோழன் மன்னனுக்கு பணிந்து நல்லுறவை வேண்டி தம் மகளான 'மங்கையற்கரசி' யை மணமுடித்து வைத்திருக்க வேண்டும்.

மனதை குழப்பத்தில் ஆழ்த்தும் நெறிமுறைகளை தவம் எனக்கொண்டு, தன்னுடலை வறுத்திகொள்ளும் சமணரின் சமயவலைக்குள் அகப்பட்டு, சம்பந்தரின் திருவருளால் சமணவலையிலிருந்து விடுபட்டு பின் சைவமதம் தழுவியவர் நெடுமாறன். என சேக்கிழார் கூறுகிறார்.

13ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி "திருவாலவுடையார் திருவிளையாடற்புராணம்" என்ற நூலை எழுதுகிறார். இவருக்கு அடுத்து 16 ம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் மேலும் ஒரு திருவிளையாடற்புராணம் இயற்றப்படுகிறது. ஆனால் இரண்டிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் பரஞ்சோதி முனிவர் நிறைய புதுத்தகவல்களை புராணமாய் புகுத்துகிறார். இப்புராணமே ஓவியமாய் மதுரையில் உள்ளது. மதுரையை சுற்றி எண்பெருங்குன்றுகள் இருந்ததாய் தேவாரம், நாலடியார் வாயிலாய் அறியலாம். அக்குன்றுகளில் சமணர் தங்கி சமயம் வளர்த்தனர். பாண்டியன் அறியா வண்ணம் அவரது தளபதி குலச்சிறையாரும், பாண்டி மாதேவியும் சிவவழிபாடு நடத்தினர். அச்சமயம் சம்பந்தர் திருமறைக்காட்டில் இருந்தார். மன்னனுக்கு வெப்புநோய் வர, கூன்விழுந்து நிமிர முடியாமல் அவதியுறுகிறார். அந்நோயை தீர்க்க இயலாமல் சமணர் தவித்தனர், பின் சம்பந்தர் திருநீறு பூசி குணப்படுத்துகிறார். அதன்பின்னே அவர் "நின்ற சீர் நெடுமாறன்" என அழைக்கப்படுகிறார். அதன்பின் சமணர்-சம்பந்தர் வாதமிடும் நிகழ்வு நடைபெறுகிறது. வாதில் தோற்ற சமணர் தம் வாக்குபடி சமணர் எட்டாயிரம் பேரும் கழுவிலேறுகின்றர். என சேக்கிழார் கூற அதையே பரஞ்சோதி முனிவரும் கொஞ்சம் மிகைபடுத்தி கூறுகிறார். இந்நிகழ்வு இன்றுவரை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. காரணம் அந்நிகழ்வு அக்காலகட்டத்தில் பெரும் கொடுநிகழ்வு
, இதனை நிச்சயம் சமண இலக்கியங்கள், கல்வெட்டுகள் பதிவு செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு எங்கும் இல்லை. எண்ணாயிரம் என்பது அங்குள்ள சமணக்குழுவின் பெயராய் நாம் கருத இடமுள்ளது. இதற்கு உதாரணமாய் திசையறி ஐநூற்றுவர், தில்லை மூவாயிரவர் என்ற குழுக்களை கூறலாம். இவை எண்ணிக்கையை குறிப்பதன்று அக்குழுவின் பெயரே ஆகும். அதுபோல எண்ணாயிரம் சமணக்குழுவிலிருந்து ஓரிருவர் வாதில் தோற்று தாமே முன்வந்து இறந்திருக்க வேண்டும். இதனையே சேக்கிழாரும் எண்ணாயிரவர் என கூறியிருக்க வேண்டும். ஆனால் பரஞ்சோதியார் தம் நூலில் இன்னும் மிகைப்படுத்தி குலச்சிறையார் தப்பித்துஓடிய சமணர் ஒருவரையும் விடாது எட்டாயிரம் பேரையும் கொன்றார் என்கிறார். இக்கதையே நிலைத்துவிட்டது இப்போது வரை. 
இந்நிகழ்வால் இன்றுவரை தெய்வக்குழந்தையான சம்பந்தருக்கும், பாண்டியமன்னனுக்கும், அவர்தம் மனைவி மங்கையற்கரசிக்கும், குலச்சிறையாருக்கும் எட்டாயிரம் பேரை கொன்றவர்கள் என்ற அவச்சொல் வந்துவிட்டது.
அமணர் கழுவேற்றம் முடிந்ததும திருநீறு பூசிச் சைவரானார் நெடுமாறனார்.
பின் சமந்தருடன் ஆலவாய்ப் பெருமான் முன் நின்று வணங்கி சென்று தென்னக பகுதியில் சிவநெறியை பரவச்செய்தார்.
சிவநெறியிலே நெடுங்காலம் அரசாண்டு, பலவெற்றிகளை ஈசன் அருளால் பெற்று சிவலோகபதவியை அடையும் பெரும்பேற்றினை பெற்றார்.


சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#நின்றசீர்நெடுமாறநாயனார்
#நாற்பத்துஎட்டாம்நாள்



காரிநாயனார்

தினம் ஒரு அடியார்-47

காரிநாயனார்:

வேத அந்தணர் மிகுந்து வாழும் திருக்கடவூரில் அந்தணர் குடியில் தோன்றியவர் இவர். 
இவரது பூசைநாள்: மாசி பூராடம்
வண்மையான தமிழ்மொழியின் நுட்பத்தினை அறிந்து அதன் சொற், பொருட் சுவைதனை முழுவதும் உணர்ந்து, அச்சொற்களை இணைத்து தம்பெயரால் "காரிக்கோவை" எனும் நூலினை இயற்றி அதனை மூவேந்தர்களிடமும் சென்று படைத்துக் காட்டுவார்.

"குறையாத தமிழ்க்கோவை தம் பெயராற் குலவும் வகை முறையாலே
தொகுத்தமைத்து" 

என்று இவர்குறித்து சேக்கிழார் பாடுவதனால்,காரிக்கோவை 
என்றதோர் அகப்பொருட்டுறைக்
கோவை நூல் இவரால் செய்யப்பட்டதென்று தெரிகிறது. இந்நூலைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை, அவ்வாறு கிடைத்திருப்பின் தமிழ்த்தாயின் அணிகலன்களில் மேலும் ஒன்று கூடியிருக்கும், இவர் சம்பந்தர் காலத்திற்கும், சுந்தரர் காலத்திற்கு முன்பாக இடைபட்ட அடியார், இவரது காலம்(650-800)

தம் தமிழ்ப்புலமையினால் மூவேந்தரின் வண்மையை தனித்தனியே பாடி, அளவில்லாத செல்வங்களை பரிசிலாய் கொண்டு, தம் சொந்த பொருட்செலவில் ஈசன்உறையும் கோவில்கள் பலவற்றை கட்டினார். மேலும் தம்செல்வங்களை கொண்டு சிவனடியார்களுக்கு வேண்டுவன அளித்து திருத்தொண்டு ஆற்றி வந்தார்.


கடல்சூழ்ந்த இவ்வுலகில் கோவில் எடுத்தல், அடியார்தம் வேண்டுவன செய்தல் போன்ற நற்காரியங்களை செய்துவந்த காரிநாயனார். நாள்தோறும் சிவபெருமான் உறையும் கயிலை மலையை நினைத்து, தம் பூதவுடலோடு கயிலையை அடைந்தார்.

“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#காரிநாயனார்
#நாற்பத்துஏழாம்நாள்



Thursday, 14 May 2020

கனம்புல்ல நாயனார்


தினம் ஒரு அடியார்-46

கனம்புல்ல நாயனார்:

வடவெள்ளாற்றின் தென்கரையிலுள்ள இருக்குவேளூரில் பிறந்தவர் இவர். 
இவரது பூசைநாள்: கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம்,
இருக்குவேளூர் தற்சமயம் பேளூர் என அழைக்கப்படுகிறது. இவ்வூர் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ளது. இவ்வூர்தான் கணம்புல்லனார் பிறந்த ஊர் என அறிஞர்களால் பொதுவாய் கருதப்படுகிறது! 
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருக்குவேள் எனும் சங்ககால வேளிர் குழு சோழர்காலம் வரையிலும் தழைத்து இருந்தது. சோழ, பாண்டிய நாட்டின் எல்லைப்பகுதியாய் வெள்ளாறு இருந்தது, இதை கருத்தினில் கொண்டால் இருக்குவேளிர் ஆண்ட புதுக்கோட்டை பகுதிகளாய் கூட இருக்கலாமோ என கருத இடமுள்ளது.  இவர் அப்பர்-சம்பந்தருக்கு காலத்தால் முற்ப்பட்ட நாயனார். இவரது காலம் கி.பி 300-500 என கருதப்படுகிறது! 

செல்வச்செழிப்பான செல்வந்தர் குடியில் பிறந்தவர் இவர். மாடமாளிகைகள் நிறைந்த வடவெள்ளாற்றின் தென்கரையில், சோலைகள் நிறைந்த பலாப்பழத்தினின்று வடிந்த மதுவானது நீர் மடுக்களை நிறைக்கும் வளமுடைய வயல்களை உடைய இருக்குவேளூரில் பிறந்தவர் இவர். அவ்வூரிலுள்ள மக்களுக்கெல்லாம் தலைவராய் விளங்கியவர் இவர். பெருஞ்செல்வம் சூழ இருந்தாலும் ஈசனின் திருவடியையே உலகின் மெய்ப்பொருள் எனும் நெறியை பின்பற்றி வந்தார்.  சிவன் கோவிலில் இடையறாது நந்தாவிளக்கு ஏற்றும் திருப்பணியை செய்து வந்தார். அக்காலத்தில் விளக்கேற்றும் பணி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என ஆராய்தல் அவசியம். விளக்குஓளி, தீப்பந்தம் மட்டுமே அன்று ஒளிதருவதாய் இருந்தது உலகிற்கு. அன்று இருள் என்பது இருளாகவே இருந்தது. இன்று போல் இரவை பகலாக்கும் உக்திகள் அன்று இல்லை. மேலும் விளக்கெரிக்க ஆகும் செலவும் அதிகம். பெரும்பாலும் ஆடு,பசு நெய்களையே எரிபொருளாய் கொண்டனர் எனவே இதற்கான செலவும் அதிகம். உண்மையான நெய்யினால் ஒரு அகல்விக்கு எரிக்க ஆகும் செலவை கணக்கிட்டாலே அதன்  செலவு அதிகம், தினமும் கோவிலில் நிறைய விளக்கேற்ற வேண்டி வருவதால் அதன் செலவினங்களாலேயே நிறைய நாயன்மார்கள் தன் செல்வத்தினை இழந்து வறுமையில் வாடியது குறிப்பிடத்தக்கது. ஆயினும் தான் கொண்ட நெறியின் உறுதிபாட்டை மாற்றாததாலே அவர்கள் இன்றுவரை போற்றுதலுக்குரியவராய் உள்ளனர்.

தினந்தோறும் இடையறாது விளக்கேற்றும் பணியில் திருத்தொண்டு புரிந்து வந்ததனால் வறுமையின் பிடியில் சிக்கினார் கணம்புல்லர். தில்லைக்கூத்தனை தரிசிக்கும் ஆவல்மிகுதியால் சிதம்பரப்பதியை அடைந்தார். அத்தகையொரு நாளில் திருப்புலீச்சரக் கோவிலில் விளக்கெரிக்க தன் வீட்டிலிருந்த பொருட்களை விற்று அதைக்கொண்டு திருவிளக்கு எரித்து வந்தார். பொருளும் தேய்ந்தது!  பரம்பரை பணக்காரரான கணம்புல்லனார், விளக்கெரிக்க பிறரிடம் பணம்கேட்க அஞ்சினார்.உடல்வருத்தும் நிலையில் கணம்புல்லை அரிந்து வந்து, அதனை விற்று அந்த பணத்தில் நெய் வாங்கிவந்து விளக்கேற்றிவந்தார். ஒருநாள் தான்கொண்டுவந்த புல்லை வாங்க ஆள் இல்லாமல் தவித்தார். எனினும் திருத்தொண்டினை கைவிட அவர் மனம் ஏற்கவில்லை. எனவே தன்கையில் இருந்த கணம்புல்லை எரித்து, இறைவன்முன் அழகுபோல் விளக்காய் காமித்தார்.  குறைந்தநேரமே அப்புல் எரிந்தது. மேலும் கையிருப்பு புல்லும் தீர்ந்தது. விபரீத எண்ணம் உதித்தது அவருக்கு, உடனே தனது அள்ளிமுடிந்த நீண்ட கூந்தலை அவிழ்தார். தன் தலைமுடியை கொளுத்தினார். தன் தலையையே விளக்காய் பாவித்து திரியாய் தன் முடியை ஆக்கினார். அவரது அந்த தூயஉள்ளத்தினையும், பக்தியின் திறத்தினையும் கண்டு வியந்த ஈசனார் தான் உறையும் சிவலோகத்தில் கணம்புல்லரை சேர்த்து அருள்புரிந்தார்.

கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் அடியேன்"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கனம்புல்லநாயனார்
#நாற்பத்துஆறாம்நாள்


ஐயடிகள் காடவர்கோன்

தினம் ஒரு அடியார் -45

ஐயடிகள் காடவர்கோன்:

தொண்டைமண்டலத்தின் தலைநகரான காஞ்சியில் பல்லவர் குலத்தில் தோன்றியவர் இவர்.
இவரது பூசைநாள்: ஐப்பசி மூலம்
அப்பர், சம்பந்தர் காலத்திற்கு முற்ப்பட்ட நாயன்மார் இவர். இவர் சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்து, தலம் ஒன்றிற்கு ஓர் வெண்பா வீதம் பாடினார். அந்நூல் 'ஷேத்ர வெண்பா" எனப்படுகிறது. அதில் தற்போது நமக்கு 24 வெண்பாக்களே கிடைத்துள்ளது. எஞ்சியவைகள் பதினோறாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நூல் மூலம் நமக்கு அறியப்பெறும் பழமையான தலங்கள்:
1.தில்லை 2.குடந்தை 3.திருவையாறு 4.திருவாரூர் 5.திருத்துருத்தி 6.திருக்கோடிக்கா 7.பாண்டவாய்த்தென்இடைவாய் 8.திருநெடுங்களம் 9.குழித்தண்டலை(குளித்தலை) 10.திருவானைக்கா 11.மயிலாப்பூர் 12.உஞ்சேணை மாகாளம் 13.வளைகுளம் 14.சாய்க்காடு 15.திருப்பாச்சிலா சிராமம் 16.சிராமலை(திருச்சிராப்பள்ளி) 17.திருமழப்பாடி 18.திரு ஆப்பாடி 19.காஞ்சிபுரம் 20.திருப்பனந்தாள் 21.திருவொற்றியூர் 22.திருக்கடவூர் 23.திருக்கடவூர் மயானம் 
முதலியனவாம் இவரது காலம் ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.

பாரில் சிறந்த சான்றோர் நிறைந்த காஞ்சியை சைவத்திருநெறிப்படி, ஆட்சிசெய்து நீதிவழுவா ஆட்சிசெலுத்தி வந்தார். சிற்றரசர் எல்லாம் தன் ஏவல்கேட்டு நிற்கவும், வடதென் கலைகள் ஒருங்கே வளரவும் அரசாட்சி நடத்தி வந்தார். சிவத்தாருத்தொண்டினை தம் வாழ்நாள் நெறியாகவும், கடமையாகவும் போற்றி வந்தார். சிவபெருமான் எழுந்தருளிய ஆலயங்களெல்லாம் கண்டுகளிக்க விருப்பம் கொண்டார். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஓர் பாடல் வீதம் பாடினார். நால்வர் பாடிய பாடல்பெற்ற மற்றும் வைப்புத்தலங்கள் குறைந்தது 300 இருக்கும்.  நிச்சயம் காடவர்கோன் இவ்வனைத்து தலங்களை கண்டு களித்து, பாடல் இயற்றியிருப்பார். அவ்வகையில், பெரும்பற்றப்புலியூர்  இறைவனது திருக்கூத்தினை நேரில் கண்டு விருப்பமுடன் ஒரு வெண்பாவை மகிழ்வுடன்  இயற்றினார்.

[இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி 
 பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ்
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்
 கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார்]

இவ்வகை நெறியாலே சிவனடியார்கள் இன்பம் அடையுமாறு தமக்கு இறைஇசைத்த பணிகளை, நீண்டகாலமாய் செய்து வந்து, மதில்சூழ்ந்த காஞ்சியில் அரசாற்றி வந்த ஐயடிகள் காடவர்கோன் இறைவனுடைய திருவடிநிழனின்கீழ் சிவபுரத்தில் வழிவழி நிற்கும் அன்பர்கள் சூழ அவர்களுடன் கலந்தார்.

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#ஐயரடிகள்காடவர்கோன்
#நாற்பத்துஐந்தாம்நாள்


Tuesday, 12 May 2020

சத்திநாயனார்

தினம் ஒரு அடியார்-44

சத்திநாயனார்:

சோழநாட்டின் வரிஞ்சையூரில், வேளாளர் குடியில் தோன்றியவர் இவர். அன்றைய வரிஞ்சியூர் இன்று இரிஞ்சியூர் என அழைக்கப்படுகிறது! இவ்வூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.
இவரது பூசைநாள்: ஐப்பசி பூசம்.

காவிரிபாயும் சோழவளநாட்டின் வளம் நிறைந்த ஊர் வரிஞ்சையூர். களை என நினைத்து உழவர்கள் பறித்த தாமரையிலிருந்து வழியும் தேன் குளத்தினை நிரப்பச்செய்யும் அளவிற்கு வளமுடையது இவ்வூர்.இத்தகைய வளமுடைய ஊரில் பிறந்நவர் சத்தி நாயனார். ஆடல்வல்லானின் திருவடியை நாள்முழுவதும் சிந்தை செய்யும் இயல்புடையவர் சத்தியர். 

[அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை 
இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை
வைத்த நாவை வலித்து அரி சத்தியால் 
சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார்]

தம் தலைவனாகிய ஈசனையும், அவர்தம் அடியாரையும் எவரேனும் இகழ்ந்து பேசினால் பேசியவரின் நாவினை அறுப்பதே தம் நெறியாய் கொண்டு வாழ்ந்து வந்தார். அவ்வாறு தீங்கு சொல்வார் நாவினை அப்போதே அரிவதற்காகவே தன் கையில் எப்போதும் தண்டாயம் எனும் நாவினை இழுக்கும் தன்மையுடைய குறடு எனும் கருவியையும், வலிந்து அரிவதற்கு கத்தியையும் கையிலேயே வைத்திருப்பார். இச்செயல்களினாலேயே அன்று சுற்றுவட்டாரத்தில் அவர் பிரபலாமியிருந்தார்.

இவ்வாறு ஆண்மை நிறைந்த திருப்பணிகள் பல ஆண்டு செய்து வந்த சத்தியார், இறைவனின் துணை கொண்டு வாழ்ந்து வந்தார். இறைவன் மீது ஐயமற்ற பக்தி கொண்ட காரணத்தால், இவ்வரிய தொண்டாற்றி வந்த சத்தியார், இறுதியாய் ஈசன் திருவடி நிழலை அடைந்தார்.

“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” 

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#சத்திநாயனார்
#நாற்பத்துநான்காம்நாள்

கலிய நாயனார்

தினம் ஒரு அடியார்-43

கலிய நாயனார்:

தொண்டைநாட்டு திருவொற்றியூரில் எண்ணெய் விளைத்தொழில் புரியும் செக்கார் வகுப்பில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: ஆடி கேட்டை
சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழம்பெரும்பதி திருவொற்றியூர். மலர் நிறைந்த சோலைகளையும், தேர்கள் உலாவும் வீதிகளையும் கொண்டது. இவ்வூரில் அனைத்து சமயத்தினரும் வாழ்ந்தனர்.  திருவொற்றியூரில் வெயில் போன்று ஒளிவீசும் பல்வகை மணிகள் உண்மையான தரத்துடன் கிடைத்தது. இங்கு தயில வினை(செக்கு) தொழில் இயற்றும் மனிதர்கள் வாழ்ந்துவரும் பகுதி 'சக்கரபாடித் தெரு' எனப்படும். செக்குத்தொழில் புரிவோர் அவர்கள் ஆற்றிய அறத்தின் காரணமாய் மண்ணில் அவர்கள் குடியில் தோன்றினார் கலியனார். அளவுகூற முடியாவண்ணம் செல்வவளம் படைத்தவர் இவர். திருவொற்றியூர் கோவில் முழுவதும் தினமும் விளக்கெரிக்கும் பணியை செய்து வந்தார். எண்ணில்லாத திருவிளக்கை எரித்து வந்ததன் பயனாய் அவரது செல்வங்கள் யாவும் திரியிட்ட தீபமாய் கரையத் தொடங்கியது. திரியின் அளவு குறைந்து கொண்டே வந்தாலும், அதன் ஒளி மங்காததை போல செல்வம் கரைந்து வந்தாலும் இடையறாது விளக்கேற்றும் திருப்பணியை செய்து வந்தார். பிறர் செக்குகளில் பணிக்கு சென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தினமும் விளக்கேற்றினார். நாளடைவில் அவ்வேலைக்கும் பலர் வந்ததால், அப்பணியும் கிடைக்காமல் போனது. வீட்டிலுள்ள பொருட்களை விற்று, நாளடைவில் அதுவும் கரைய, தனது வீட்டினையும் விற்று விளக்கேற்றும் பணியினை செய்தார். அதில் கிடைத்த பொருளும் காணாது போக, தன் மனைவியை விற்பதற்கும் துணிந்தார். வீதியெங்கும் மனைவி அழைத்து சென்று விலைகூவி விற்க முனைந்தார். ஆனால் ஒருவரும் வாங்க முன்வரவில்லை. கையறு நிலைக்கு சென்றார். திருக்கோவிலுக்கு வருத்தத்துடன் சென்றார். நேரம் கரைய ஆரம்பித்தது. விளக்கேற்றும் நேரமும் வந்தது.மனம் பதைத்த கலியனார், 'மணிவண்ணச் சுடர்விளக்குமாளில் யான் மாள்வேன்' எனக்கூறி அச்செயலையும் ஆற்த் துவங்கினார். விளக்கு எங்கெல்லாம் ஏற்வேண்டுமோ, அங்கு சென்று தன் உடலைக்கீரி தன் குருதியையே அங்கு எரிபொருளாய் நிரப்பினார்.அடுத்து தன் கழுத்தை அரிந்து நிறைய குருதியை பெற கத்தியை கழுத்தருகே கொண்டு சென்றார். ஈசனின் கை உடனே கலியனாரின் கரம் பற்றியது. கலியானார் காணும் வண்ணம் காளைவாகனத்தில் உமையுடன் தோன்றினார் ஈசர். ஒளிதிகழும் முகத்துடன் உச்சியின் மீது குவிந்த கையுடன் அஞ்சலி செய்து நின்றார் கலியனார். தன் சிவபுரியில் வீற்றிருக்கும்படி அருளிச்செய்தார் எம்பெருமான்.

"கை தடிந்த வரிசிலையான் கலியன் அடியார்க்கும் அடியேன் "

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கலியநாயனார்
#நாற்பத்துமூன்றாம்நாள்


Sunday, 10 May 2020

கலிக்கம்ப நாயனார்

தினம் ஒரு அடியார்-42

கலிக்கம்ப நாயனார்:

நடுநாட்டிலுள்ள பெண்ணாகடம் என்ற ஊரில் வணிகர்குடியில் பிறந்தவர் இவர். இவரது பூசைநாள்: தை ரேவதி.

நல்லொழுக்க நெறிகளை உரிமையாக பெற்று பழமையான மரபு வழிபட்ட இல்லறநெறிகளை பின்பற்றி வாழ்ந்துவரும் பெருங்குடி மக்களை உடைய ஊர் பெண்ணாகடம். இத்தகைய ஊரில் தோன்றியவர் கலிக்கம்பர் பெண்ணாகடத்தில் வீற்றிருக்கும் தூங்கானைமாடத்து ஈசனைத்தவிர வேறு எதையும் எண்ணாதவர், என உலகம் போற்றும்வண்ணம் வாழ்ந்து வந்தார்.

[சோழர் காலக் கல்வெட்டுக்கள் நிறைய இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் "தூங்கானைமாடமுடைய நாயனார்" என்று குறிப்பிடப்படுகின்றார்.
தமிழகத்தில் உள்ள கோயில்களின்  தோற்ற அமைப்பில், சில கோயில்கள்  தூங்கானை விமானம்(கஜப்பிரஷ்டம்) என வழங்கப்படும் யானையின் பின்புறம் போன்ற அமைப்புடைய கோவில்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது!
இக்கோவில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல்பெற்ற தலம் ஆகும்.

"மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்                                                            தொழுமின்களே!"
வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக என சம்பந்தர் கூறுகிறார்.

தமிழகத்தின் பழமையான கற்கோவில் எனக்கருதப்படும் கூரம் சிவன் கோவில்(கி.பி 679) இவ்வகை கோவிலே, இக்கோவில்கள் தொண்டைமண்டலத்திலேயே அதிகம் காணப்படுகிறது! மிக அரிதாக புதுக்கோட்டையில் குலோத்துங்கன் கால கற்றளி ஒன்று இவ்வகையில் உள்ளது.
சம்பந்தரின் காலம் 630-640 என கூறப்படுகிறது. அவர் பாடிய பாடலிலேயே தூங்கானை மாடக்கோவில் என வருவதனால் குறைந்தது அவருக்கு 100-200 ஆண்டுகள் முன்பாகவே அக்கோவில் இருந்திருக்கும். ஆகவே  தமிழகத்தின் முதல் தூங்கானை மாடக்கோவில் இக்கோவில் எனக்கூறலாம். ஆரம்பத்தில் இக்கோவில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் சோழற்காலத்தில் புணரமைக்கப்பட்டு கருங்கற்களால் தற்போதைய கட்டுமானம் கட்டப்பட்டிருக்கும்.]

சிவஅன்பராகிய கலிக்கம்பர், ஈசன்அடியார்கள் எவரேனும் தென்பட்டால் அவர்களுக்கு நல்ல திருவமுதும், கறிவகைகளும், நெய், தயிர், பால், கனி முதலான உணவுவகைகளை தூய்மையான முறையில் தயாரித்து அவர்கள் உண்ண பின்பே தாம் உண்ணும் வழக்கம் உடையவர். அடியார் விரும்பும் நிதிகளையும், பிறவற்றையும் குறைவில்லாமல் வழங்குவார். ஒருநாள் தம்வீட்டிற்கு அடியார்களை திருவமுது உண்ண எழுந்தருளுமாறு வேண்டினார்.முதலாய் அடியார்களின் திருவடியை நீர்விடுத்து விளக்க முற்பட்டார். அச்சமயம் கலிக்காமரின் அழகுமிக்க மனைவி அடியார் உண்ண உயரிய பதார்த்தங்களை தயாரித்து, கரகத்தில் நீரை ஏந்தியபடி,தன் கனவரின் அருகே நின்றார். மனைவியார் நீர்வார்க்க கலிக்கம்பர் அடியார் பாதத்தை தூய்மை செய்தார். முன்பு கலிக்கம்பருக்கு பணியாளாய் இருந்த ஒருவன், அடிமைப்பணியை சினந்து வெளியேறினான். அதன்பின் எலும்பும், அரவும் சூடிய சிவபெருமானின் அடியாராகி திருவேடம் தாங்கி, கலிக்கம்பர் வீட்டிற்கு அழைத்துவந்த அடியார்களில் ஒருவனாக வந்து நின்றார். அவரின் பாதத்தினை தூய்மை செய்ய முனைந்தார் கலிக்காமர். தம்கைகளினால் அவ்வடியாரின் பாதத்தை பற்றியபோது, முன்பு நம் வீட்டில் இருந்த ஏவலாள் தான் என மனதில் எண்ணினார் கலிக்கம்பரின் மனைவி, இந்த சிந்தனையில் அவர் நீர்விட தவறிவிட்டார். தன்மனைவியின் மனத்தினை குறிப்பால் உணர்ந்தார் கலிக்கம்பர். தன் மனைவிக்கு இவ்வடியார் முன்பு தன்வீட்டில் புரிந்த ஏவல் தொழிலே நினைவில் உள்ளது. ஆகவே நீர் வார்க்காமல் விட்டுவிட்டாள், என தவறாய் கருதி, அவர்கையிலிருந்த கரகத்தை வாங்கி, அருகே இருந்த அரிவாளால் கைக்கை ஓங்கி வெட்டினார். பின் கரகத்து நீரை கொண்டு தானே அடியாரின் திருவடிகளை தூய்மை செய்தார். அடியார் உண்ண உணவினை தானே பரிமாறினார். சலியாத உறுதியான திருத்தொண்டினை அளவற்ற பெருமையுடைய இறைவன் மெச்சியவாறு, அவரை தன் திருவடிநிழலில் என்றும் இருக்குமாறு அருள்புரிந்தார்.

"கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க்கு அடியேன்."

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கலிக்கம்பநாயனார்
#நாற்பத்துஇரண்டாம்நாள்




அதிபத்த நாயனார்

தினம் ஒரு அடிகளார் 41
அதிபத்த நாயனார் :

சோழநாட்டின் நாகப்பட்டினத்தில் செம்படவர் குலத்தில் தோன்றியவர் இவர். இவரது பூசைநாள் : ஆவணி ஆயில்யம். காம்காலமாய் தொன்றுதொட்டு அரசாண்டுவரும் சோழர்குலத்தின் பொன்னிநாட்டில் சிறப்புற விளங்கிய ஓர் கடிகை நகர் நாகப்பட்டினம். பொன்போல் ஒளிவிடும் மாடமாளிகைகள் நிறைந்த ஊர். இயல்பாகவே பேரொலியினை உடைய ஊர், திருமகள் வாழ்விடமாய் கடலினை உடையது. யானைகள், குதிரைகள் என அனைத்து விதமான செல்வங்களை கொண்டது இந்த துறைமுகப்பட்டினம், செல்வச்செழிப்பான இந்நகரில் நுரையுடன் தவழ்ந்து விளையாடும் நீண்ட அலைகள் நிரம்பிய கடலுக்கு சற்று தள்ளி நிலைபெற்ற குடிகளாய் இருந்து மீன்பிடிதொழிலை மட்டும் செய்துவரும் பரதவர்கள் நிரம்பிய "நுளைப்பாடி" எனும் சிற்றூர் இருந்தது. உலர வைக்கப்பட்டிருக்கும் மீன்களை கவர்ந்து உண்ணவரும் குருகுகளுடன் வரும் அன்னப்பறவை நிரம்ப இருக்கும். நெடிதான மீன்வலையை உயர்த்தி சுருட்டி வைப்பபதற்கான முயற்சியில் ஈடுபடும் மீனவர் எழுப்பும் ஒலியும், மீன்வியாபரத்தில் விலைகூறி விற்பவர், வாங்குபவர் எழுப்பும் ஒலியும் அலைகள் வழியாக ஒலியெழுப்பும் கடல் ஒலிக்கு நிகரானது. இவ்வாறான சிறப்புகள் நிறைந்த நுளைப்பாடியில் ஈசனுக்கு சிவத்தொண்டு புரிந்து வந்தார் அதிபத்தர் எனும் அடியார். நுளையர் இனத்தின் தலைவராகவும் அவர் விளங்கினார். அலைகள் வீசும் கடலில் புதுப்புது யுக்தியை கையாண்டு விதவிதமான உயர்வகை மீன்களை பிடித்து உயர்வாய் வாழ்ந்து வந்தனர் அவ்வூர் மக்கள். தடையற்ற மீன் வரவினால் செழிப்புடன் வாழ்ந்த அதிபத்தர், தன்மீன்பிடி தொழிலில் முதலில் கிடைக்கப்பெறும் மீனினை மீண்டும் கடலிலேவிட்டு, "இம்மீன்  நட்டம் பயின்றாடிய நம் இறைவனுக்கு ஆகுக" என வேண்டி வந்தார். இச்செயலை நாள்தோறும் தவறாது செய்துவந்தார். இடையறாது இத்தொண்டாற்றி வரும்வேளையில், சிலநாட்களாக அதிகம் மீன் மாட்டாது, ஒருமீன் மட்டுமே மாட்டும். இது இறைவனின் அன்புசோதனையே என உணர்ந்து, "கிடைப்பது ஒரு மீனாயினும் அது இறைவனுக்கே" எனும் கொள்கையுடைய அதிபத்தர் அதைமீண்டும் கடலிலேயே விட்டார். தினசரி மீன் கிடைக்காது அதிபத்தரின் குடும்பமே வறுமையில் வாடியது. வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் விற்று குடும்பம் நடத்தும் நிலைமை ஏற்ப்பட்டது! உணவு கிடைக்காமல் குடும்பத்தினரும் உறவினரும் சாககிடைக்கையில், அன்று கிடைத்த ஒருமீனையும் கடலில்விட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினார்.

தினமும் இது தொடர்கதையாகியது. உணவு கிடைக்காததால் வறுமையில் உடல் பொழிவிலந்தது, அப்போதும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார். அவ்வகையில் ஒருநாள் வலைவீசுகையில் மீன் ஏதும் கிடைக்கவில்லை. மாறாய் ஈசன் அருளால் பொன்னால் ஆன பிரம்மாண்டமான ஒருமீன் கிடைத்தது. அம்மீனை விற்றால் இவ்வுலகையே விலையாய் கொள்ளும் தகுதிஇருந்தது அம்மீனுக்கு. ஆனாலும் தான் கொண்ட நெறிப்படி வறுமையாய் இருப்பினும் அம்மீனை கடலில் விட்டார்.

 பொருளை மையமாய் கொண்டு இயங்கும் இவ்வுலகில், பொருட்பற்றினை ஒழித்து நின்ற அதிபத்தரின் திருத்தொண்டின் திறத்தை வியந்த இறைவன் தனது காளைவாகனத்தில் வானில் எழுந்தருளினார். அந்நிலையில் தேவர்கள் கற்பகப்பூ மழையைத் தூவினர். அதைக்கண்டு நிலத்தில் விழுந்து பணிந்தார். சிவபெருமான் தன் கைலாயத்தில் சிறப்புற வீற்றிருக்கும் அடியார்களில் ஒருவராக இருந்துவரும் பெரும்பேற்றினை பெற்றார்.

"விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#அதிபத்தநாயனார்
#நாற்பத்துஒன்றாம்நாள்



Popular Posts In This Blog