Saturday, 23 May 2020

கோட்புலி நாயனார்

தினம் ஒரு அடியார்-55

கோட்புலி நாயனார்:

சோழவளநாட்டின் திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மி. தொலைவில் உள்ளது திருநாட்டியத்தான்குடி, உழவுத்தொழில் புரியும் வேளாண் மக்கள் நிறைந்த ஊரில், வேளாண் குடியில் பிறந்தவர் கோட்புலிநாயனார். மன்னனுக்கு நெருக்கமாய் தந்திரியாய் இருந்து பகைவர்நாடு பணியும் வண்ணம் போர்புரிபவர். சேக்கிழார் அம்மன்னன் பெயரை கூறவில்லை எனினும் மணிமுடிசோழன் எனும் சோழனின் மகனாய் இருக்கக்கூடும். 
இந்நாயன்மார் காலத்தில் சைவம் மகோன்னதமாய் இருந்த காலம், சம்பந்தர் பெருமானின் முயற்சியால் மனமாற்றம் அடைந்த கூன்பாண்டியனாகிய அரிகேசி பாண்டியனின் மகன் கோச்சடையான் ரணதீரன் தென்புலத்தையும், கழற்சிங்கன் என அறியப்பட்ட ராஜசிம்மபல்லவன் வடதமிழகத்தையும், சேரமான்பெருமாள் மலைநாட்டையும் ஆண்டு சைவநெறியை பலப்படுத்தினர். 
சுந்தரர் தம் ஏழாம் பதிகத்தில்,

"கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்
பாடநும் பாவம்பற்றறுமே"

என்று கோட்புலிநாயன்மார் குறித்து பாடுகிறார் சுந்தரரின் சமகாலத்தில் வாழ்ந்ததால் இந்நாயன்மார் சுந்தரரின் காலமான 8 ம் நூற்றாண்டின் ஆரம்பபகுதியையே கொள்ளலாம். 
இவரின் பூசைநாள்: ஆடி கேட்டை

இவர் தம்வன்மையான போர்புரியும் திறத்தால் மன்னர் மூலம் பெருஞ்செல்வம் ஈட்டுவார். அப்பணத்தினை கொண்டு இறைவனுக்கு திருவமுது கொடுக்க செந்நெல்லை மலைபோல் குவித்து வந்தார். இத்திருப்பணியை பல கோவில்களில் செய்தார். ஓர்நாள் போருக்குசெல்லவேண்டிய நேரம் வந்தது. அப்போது செந்நெல்லை பெருங்குன்று போல குவித்து அதனை பாதுகாத்து சென்றார். போருக்கு செல்லும்முன் தன் சுற்றத்தார், உறவினர்களை அழைத்து, "இந்நெல் இறைவனுக்கு படைக்க வைத்தது, இதனை எவரேனும் எடுத்தால் அவர்களை நான் அழிப்பது உறுதி! இது திருவிரையாக்கலியின் மீது ஆணை! என்றார், திருவிரையாக்கலி என்பது, சிவபெருமானைக் குறித்துச் சொல்வதோர் ஆணை எனப் பொருள்படும்.

அவர் சென்ற சில காலத்தில் அவ்வூரில் பஞ்சம் ஏற்ப்பட்டது! வானம் பொய்த்தது! வயல்கள் வறண்டது! உணவுப்பொருள் கிடைக்க வழியின்றி மக்கள் தவித்தனர். இப்படியே காடந்து இறப்பதை விட கோட்புலியின் வீட்டு சென்ற நெல்லினை கொண்டு உயிர்வாழ்வோம்! பஞ்சம் நீங்கியதும் மீண்டும் நெல்லினை அளித்துவிடுவோம், என முடிவெடுத்து கோட்புலியார் வைத்து சென்ற நெல்லினை எடுத்து உணவருந்தினர்.
போரிலே கவனம் செலுத்தி, நீண்டநாள் கழித்து தாயகம் திரும்பினார் கோட்புலியார். அங்கே வரும்வழியில் ஊரார் தம்நெல்லினை எடுத்த செய்தியை அறிந்தார். அக்கனமே அவர்களை அழிக்க வெஞ்சினம் கொண்டார். மனமகிழ்வுடன் இனியமொழிகூறி சுற்த்தார் கோட்புலியாரை வரவேற்றனர்.அவர்களிடம் மறுமொழி கூறி, அழகிய உயர்ந்த ஆடைகள் உறவினர்களுக்கு வாங்கி வந்துள்ளேன்! அனைவரும் வருக! என வரவேற்றார். அனைவரும் வந்ததும் வீட்டின் கதவினை அடைத்து, "இறைவனுக்கு படைக்க வைத்த நெற்களஞ்சியத்தை அழித்த! உங்களை சும்மா விடுவேனா?! என சினத்துடன் அவர்கள் முன்புகுந்தார், எதிர்பட்டோர் அனைவரையும் தந்தையார், தாயார், உடன்பிறந்தோர், குழந்தைகள், அடிமைகள் உட்பட சாரமாரியாய் வெட்டி வீழ்த்தினார். 

[பின்னங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் அவ் 
வன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என  
இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது என எடுத்து எறிந்து 
மின்னல்ல வடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார்]

கோட்புலியாரின் கொலைபாதகச் செயலில் இருந்து ஓர் பச்சிளங்குழந்தை தப்பியது, குற்றுயிராயிருந்த பாட்டன் ஒருவர் குலம் தழைக்க இந்த குழந்தையையாவது விட்டு வாடு என கெஞ்ச, "சோறு சாப்பிடவில்லையென்றால் என்ன?" சோற்றையுண்ட அன்னையின் முலைப்பாலை அக்குழந்தை அருந்தியிருக்குமே என கூறி ஆவேசத்துடன் இருதுண்டாய் வெட்டி வீழ்த்தினார். 

அந்நிலையில் கோட்புலியாரின் வீட்டு வாசலில் ஈசன் தோன்றினார். உன்னுடைய கையினால் மிகுதியான அன்பிற்குயவர்களை கொன்றுவிட்டாய்! வெட்டுண்டு இறந்த அனைவரும் தேவருலகம் சென்றுவிடுவர்! புகழுடைய நீயும் நம்முடன் வந்து சேர்வாயாக! என அருளினார்.

ஈசன்மேல் கொண்டஅளவற்ற அன்பினால் தம்குழந்தை உட்பட அனைவரையும் கொன்ற கோட்புலியார், இறுதியில் அவர் அருளாலே அவர் திருவடியடைந்தார்.

அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்” 

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கோட்புலிநாயனார்
#ஐம்பத்துஐந்தாம்நாள்

Friday, 22 May 2020

புகழ்த்துணை நாயனார்

தினம் ஒரு அடியார்-54

புகழ்த்துணை நாயனார்:

அழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைப்புத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம் பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவமறையோர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். 
இவரது பூசைநாள்: ஆனி ஆயில்யம்
மலையை வில்லாய் வளைத்த ஈசனைத் தொட்டு திருப்பணிகள் செய்து வருவதையே நெறியாய் கொண்டு தினமும் சிவத்தொண்டு புரிந்து வந்தார்.

இந்நாயன்மாரை குறித்து சம்பந்தர், தமது பதிகத்தில்,

நிலம்த ணீரோடு அனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கண் சோழனாகச் செய்தான்ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்றுஓர் காசுஎய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

[நிலம், தண்ணீர், அனல், காற்று விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்]

என்று குறிப்பிடுவதால் புகழ்த்துணையாரின் காலம், சம்பந்தருக்கு முற்ப்பட்ட காலமாய் அதாவது கி.பி300-600 என உறுதியாய் கூறலாம்.

சிவபெருமானை தத்துவ முறைப்படி புகழ்த்துணையார் வழிபட்டு வரும் நாளில், இவ்வுலகில் திடீரென பஞ்சம் ஏற்ப்பட்டது. பசியால் உயிர்கள் வாடியது, உண்ண உணவின்றி தவித்தனர், ஆயினும் புகழ்த்துணையார், இறைவனை ஆதரவின்றி விடமாட்டேன் என்ற சிந்தனையுடையவராய் இரவும் பகலும் என இருநேரங்களிலும் தேன்நிரம்பிய மலர்களைக் கொண்டும், நீர்கொண்டும் பூசைகளை செய்து வந்தார். வறுமை மேலும் பெருகியது, உணவு அருந்தாது தளர்ந்துபோனார் புகழ்த்துணையார். திருமஞ்சணநீரை குடத்தில் நிரப்பி லிங்கபானத்தின் தலையில் வைத்துவிட்டு மயங்கிச்சரிந்தார். மயங்கியவர் கனவில் தோன்றினார் இறைவன், "இனி பஞ்சம் நீங்கும் காலம் வரையிலும் இங்கே தினமும் ஒருகாசு யாம் வகிப்போம்" என கூறியருளினார். துயில் கலைந்த புகழ்த்துணையார் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தார். ஆவுடைப்பகுதியில் ஓர் பொற்காசு இருப்பதனை கண்டார். முகமலர்ச்சியுடன் அதனை எடுத்துக் கொண்டார். பின் ஒவ்வொருநாளும் இந்நிகழ்வு தொடர்ந்தது. தினமும் வழிபாட்டின் முடிவினில் பொற்காசு இருப்பதனை கண்டார். அதனை விற்று அதன்மூலம் தம் வறுமையை போக்கினார்.

[அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே   
 இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்  
 மின்னார் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து  
 பொன்னாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார் ]
 
 உலகமும் வறுமையை நீங்கி செழிப்படைய தொடங்கியது. அதன்பின் தம் வாழ்நாளின் இறுதி காலம் வரையிலும் இடைவிடாது சிவத்தொண்டு புரிந்து, தேவர் உலகத்தவர் தொழுமாறு இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

“புடைசூழ்ந்த புலியதண் மேல் அரவாட வாடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#புகழ்த்துணைநாயனார்
#ஐம்பத்துநான்காம்நாள்

செருத்துணை நாயனார்

தினம் ஒரு அடியார்-53

செருத்துணை நாயனார்:

செல்லும் இடமெல்லாம் வளங்கொழிக்க செய்யும் பொன்னிநதியை தடுத்து நிறுத்தி மதகிட்டு அடைத்து, அம்மதகுகளில் கயல்மீன்களையும், செழுமையான மணிகளை கொண்டுவந்து சேர்க்கும் ஊர் தஞ்சாவூர். இவ்வூரில் வாழும் மக்கள் எண்ணமும், செயலும் ஒன்றே என்று வாழ்ந்து வருபவர்கள். 
மகேந்திரவர்மன் எழுப்பிய திருச்சி குடைவரை கோவிலில் முதன்முதலாய் "தஞ்சஹரக" எனும் கிரந்தலிபி எழுத்து காணப்படுகிறது! இது மகேந்திரனின் வெற்றிபெயராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது! அதன்பின் அப்பரின் திருவீழிமலைப் பதிகத்தில் "தஞ்சை தளிக்குளத்தார்" என்று தஞ்சையிலுள்ள ஓர் பழம்பதியை பற்றி குறிப்புள்ளது. அதற்கடுத்து திருமங்கையாழ்வாரும் திவ்யப்ரபந்த பாசுரங்களில், "தஞ்சை யாளியைப் பொன்பெய..." என்று பாடுகிறார்,அதன்பிறகு முத்தரையமன்னனான பெரும்பிடுகு முத்தரையனின் செந்தலை கல்வெட்டு அவரை "தஞ்சைகோன்" என சிறப்பாய் கூறுகிறது. முத்தரையரிடமிருந்து விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி "தஞ்சை கொண்ட கோப்பரகேசரி" என அழைத்துகொள்கிறார், அதன்பின் அந்நகர் சோழர்களின் தலைநகராகி இன்றுவரை வரலாற்றில் ஓர் சிறப்பான இடம்பெற்று வருகிறது.

இவ்வளவு பழம்பெருமை வாய்ந்த தஞ்சை நகரில் வேளாண் குடியில் பிறந்தவர் செருத்துணை நாயனார்.
இவரது பூசைநாள் : ஆவணி பூசம். வெந்நீறு மேனியெங்கும் பூசி ஈசனின் திருநாமத்தை போற்றுவதனையே தன் நெறியாய் கொண்டு வாழ்ந்து வந்தார்.
அச்சமயம் பேரரசனாய் சோழதேசத்தினையும் சேர்த்து ஆண்டு வந்த கழற்சிங்கனாரின் மனைவி, திருப்பூமாலை தொடுக்கும் மண்டபத்தில் கீழுள்ள மலரை எடுத்து முகர, இதனை கண்டு பொறுக்காத செறுத்துணையார் ஒளிவீசும் கூர்மையான தன் கத்தியை எடுத்து அரசியாரின் அழகிய கூந்தலை பிடித்து சுற்றி மண்டபத்தின் படியில் கீழே தள்ளி, ஈசனின் தலையில் ஏறும் பூவையா முகர்ந்தாய்! எனக்கூறி மூக்கினை அரிந்து தள்ளினார். 
இறைவன் மீது கொண்ட தூய அன்பினால், எவருக்கும் அஞ்சாமல், இறைவன் திருவருளால், தன் தீரத்தை உலகிற்கு உணர்த்திய செருத்துணையார், வாழ்நாள் முழுவதும் சிவநெறியில் நின்று ஒழுகி, இறைவனின் தூக்கிய திருவடி நிழலின் கீழ் இனிதே இருக்கும் பேற்றினை பெற்றார்.

"மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் ."

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#செருத்துணைநாயனார்
#ஐம்பத்துமூன்றாம்நாள்

Thursday, 21 May 2020

இடங்கழிநாயனார்

தினம் ஒரு அடியார்-52

இடங்கழிநாயனார்:

இன்றைய புதுக்கோட்டை பகுதிகள் சங்கஇலக்கியத்தில் "பன்றிநாடு" என அழைக்கப்பட்டது. இது கோனாடு கானாடு என இருபெரும் பிரிவுகளால் பிரிக்கப்பட்டது. இவற்றில் கோனாடு நான்கு பெரும் கூற்றங்களை கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தென்பகுதி தென்கோனாடெனவும் அழைக்கப்பட்டது. அக்கோனாட்டின் புகழ்பெற்ற கொடும்பாளூரில் இருக்குவேள் எனும் வேளிர் மரபில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: ஐப்பசி கார்த்திகை கொடும்பாளூர் அன்று சிலப்பதிகாரத்தில் "கொடும்பை" என அழைக்கப்பட்டது. இவ்வூர் அன்று ஒரு பெருவழியாக இருந்துள்ளது. இவ்வழியாய்தான் கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு சென்றுள்ளனர். 

இடங்கழிநாயனாரை தில்லை அம்பலத்தில் பொன்வேய்ந்த ஆதித்த சோழரின் முன்னோராக சேக்கிழார் கூறுகிறார். நம்பியாண்டார் நம்பியும், தமது திருத்தொண்டதிருவந்தாதியில் 

"சிங்கத் துருவனைச் செற்றவன் 
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா 
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் 
செல்வ மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே 
ளூர்மன் இடங்கழியே"

என ஆதித்தனின் குலமுதல்வனாய் சுட்டுகிறார். சோழர்களின் முன்னோராய் புகழ்ச்சோழர், கோச்செங்கனான் போன்றோர் இருக்க அவர்களை சுட்டாமல் ஒரு வேளிர்குல நாயன்மாரின் முன்னோராக ஆதித்தனை கூற காரணம் எதுவென கேள்வி வருகிறது! பொதுவாய் நம்பியாண்டார்நம்பியின் காலம் ராஜராஜனின் காலமே என கூறுவர். அதனை ஏற்றுக்கொண்டால், கொடும்பாளூர் வேளிரான பூதிவிக்ரமகேசரிக்கு ஆதித்தவர்மன், பராந்தகவர்மன் என இருமகன்கள் இருந்துள்ளனர். இவர்களின் காலம் நம்பியாண்டர்நம்பி, ராஜராஜனுடன் ஒற்றுவருகிறது. மேலும் பூதிவிக்ரமகேசரி கரூர்வஞ்சியை வென்றதாய் தன் கல்வெட்டுகளில் கூறுகிறார்,அப்போரினை இளவரசனாய் அவரது மகன் ஆதித்தவர்மன் நடத்தியிருக்க வாய்ப்புண்டு.ஆகவே நம்பியாண்டார்நம்பி கூறும் ஆதித்தன் சோழப்பேரரசன் ஆதித்தன் என்று கொள்ளாமல் வேளிரான ஆதித்தவர்மனையே குறிப்பதாய் கொள்ளலாம்.

மன்னனாக இருந்தாலும் ஈசனின் திருவடியை போற்றுவதையே குறிக்கோளாய் கொண்டிருந்தார் இடங்கழியார். சிவனடியாரை நாள்தோறும் போற்றி வந்தார். சைவநெறியை வைதீகநெறியுடன் தழைத்து விளங்குமாறு வழிபாடுகளை சிவாகம முறைப்படி ஆக்கினார். சிவனடியாருக்கு தினமும் உணவளிப்பதனையே தம் நெறியாய் கொண்டு வாழ்ந்து வந்தார். அப்பணியானது ஓர்நாள் தடைபட்டது. உணவுப்பொருட்கள் பண்டாரத்திலிருந்து கிடைக்கவில்லை. மிகவும் மணம்வருந்திய இடங்கழியார் நெற்களஞ்சியம் சென்றார். அங்கு விசாரணை மேற்கொண்டு திருடனை கண்டறிந்தனர். மன்னர் முன்பு அத்திருடனை கொண்டு சென்றனர்.

நெற்றியில் திருநீறு பூசிய அடியார் ஒருவர் தன்முன் திருடனாய் இருக்கக்கண்டு பதறினார் இடங்கழியார். காரணம் எதுவென விசாரிக்கையில், சிவனடியாருக்கு உணவளிக்கவே அவ்வாறு செய்தேன் எனக்கூற,
''எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டி ''சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க'' என பறையறிவித்து கூறினார்.

இவ்வாறு மதிப்பற்றதான பொருட்செல்வங்களை சிவனடியார்களுக்கு வாரிவழங்கி திருநீற்று நெறியினை உலகெங்கும் நிலைத்திருக்கச் செய்து சிவனின் அருளால் சிவஉலகம் அடைந்து இன்புற்றார்.

"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#இடங்கழிநாயனார்
#ஐம்பத்துஇரண்டாம்நாள்

Wednesday, 20 May 2020

கழற்சிங்க நாயனார்

தினம் ஒரு நாயன்மார்-51

கழற்சிங்க நாயனார் :

பல்வர் குலத்தில் தோன்றிய அரசர் இவர். காடவர்கோன் கழற்சிங்கன் என திருத்தொண்டர்தொகையிலும், பெரிய புராணத்திலும் அழைக்கப்படுகிறார்.
இவரது பூசைநாள் : வைகாசி பரணி
கழற்சிங்கன் என்ற பல்லவமன்னன் யார் என ஆய்வாளர்களிடையே பல கருத்துகள் உள்ளது. மூன்றாம் நந்திவர்மன் என்றும் இராசசிம்மன் என்றும் இரு கருத்துகள் உண்டு.  சுந்தரரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் இவர். ஆகவே மூன்றாம்நந்திவர்மனை இவருடன் ஒப்பிடுவது முரணாகும். மேலும் இராசசிம்மன் என்ற வடமொழிசொல்லினை கழற்சிங்கன் என தமிழில் பொருள்கொள்ளலாம். இம்மன்னனுக்கு பல விருதுப்பெயர்கள் உள்ளன. வடமொழிப்புலவனாகவும், இசை, நாட்டியம், சிற்பவியல், ஓவியம் போன்ற துறைகளில் பண்டிதம் பெற்றவராய் திகழ்ந்தார். இத்திறமையினாலே தன்னை அவர் "அத்யந்த காமன்" (அளவில்லா ஆசையுடையவன்) என அழைத்துக்கொண்டார். இவர் கட்டிய காஞ்சி கைலாச நாதர் கோவிலில் "வானொலி கேட்ட வரவாறு" என்ற செய்தி பூசலார் நாயனாருடன் பெரிதும் ஒத்து போகிறது. ஆகவே இக்காரணங்களால் கழற்சிங்கன் ராஜசிம்மனே என உறுதியாய் கூறலாம். இவர் சிறந்த சிவபக்தர்.இவர் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் போன்றே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்றைய திருப்பட்டூரில்(திருப்பிடவூர்)  ஓர் கோவில் உண்டு. இக்கோவில் ராசசிம்மன் எழுப்பியிருக்க வாய்ப்பு உண்டு. 

காடவகுலகுரிசிலான கழற்சிங்கர் வடபுல நாடுகளை கவர்ந்து, தன்னை எதிர்த்த யாவரையும் ஈசனின் அருளால் வெற்றி பெற்றார். பல்லவதேசம் முழுக்க அறநெறியில் ஆட்சிபுரிந்து வந்தார். ஈசன் உறையும் கோவிலெங்கும் சென்று திருத்தொண்டு புரிந்து வந்தார். அவ்வாறான ஒருநாளில், 'சிவபுரி' என விளங்கும் தென்திருவாரூரை அடைந்து, தம் பரிவாரங்களுடன் கோவிலினுள் நுழைந்தார், அச்சயம் அவரது பட்டத்தரசி

(ரங்கபதாகை என்பது அவர் பெயர், இவர் காஞ்சி கைலாசநாதர் கோவில் வளாகத்தில் ஒரு கோவிலை எழுப்பியுள்ளார், வரலாற்றில் முதலாய் ஒரு பெண் எழுப்பிய கோவில் இதுவே)

மணம் நிறைந்த பூக்களை தன் கூந்தலில் சூடி, கோவிலின் சுற்றி அங்குள்ள சிற்பம், ஓவியம் முதலியவற்றை கண்டு ரசித்து வந்தார். அப்போது மலர்மாலை தொடுக்கும் மண்டபத்தினுள் வருகையில் ஒருமலர் தனித்து கிடந்தது. கவர்ச்சியும், மணமும் நிறைந்த அப்பூவை எடுத்து மோந்தார். அச்செயலை கண்ட 'செருத்துணை நாய்னார்' என்பவருக்கு அச்செயலை கண்டதும் சினம் தலைக்கேறியது. இறைவனின் தலையில் சூடிய மலர் அதுவென தவறாய் எண்ணி, உடனே சென்று தன் கத்தியை உருவி, அரசியின் மூக்கை ஒரே வீச்சில் அரிந்துவிட்டார்.

ஒருகனம் ஏதும் அறியாத அரசியார் அலறியபடியே குருதிமிகுதியால் மயங்கி விழுந்தார். இறைவனை வணங்கிய கழற்சிங்கர் அங்கு வந்து சேர்ந்தார். கீழே விழுந்து வலியால் அரற்றிய தன்மனைவியை கண்டார். இப்பாதக செயலை செய்தவன் யார்? என கோபத்தில் வினவினார். அப்போது அங்கு வந்த செருத்துணையார் நடந்ததை விளக்கினார். இதைக்கேட்ட கழற்சிங்கர், அடியார் கொடுத்த தண்டனை சரிதான். மூக்கை அரிந்ததற்கு பதிலாய், அப்பூவை எடுத்த அவளது கையை அரிந்திருக்க வேண்டும் என அடியாரை கடிந்து கொண்டு, தன் உடைவாளை உருவி அரசியின் சிவந்த கையை வெட்டினார். தன் ஒரே பட்டத்துஅரசியை வெட்டிய கழற்சிங்கரின் பெருஞ்செயல் கண்டு, சுற்றத்தோர் பெருங்குரல் எழுப்பினர் அச்சத்ததில் சுற்றுபுரமே அதிர்ந்தது. இச்செயலை கண்டு வானவர், தேவர் முதலியோர் பெருங்குரலெழுப்பி, ஆரவாரம் செய்தனர், பூமழை பொழிந்தனர்.
யாவரும் செய்ய இயலா அரிய திருத்தொண்டுபுரிந்து, நீண்ட காலமாய் அரசாண்டு இறைவன் திருவடிபேற்றினை அடைந்தார்.

"கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கழற்சிங்கநாயனார்
#ஐம்பத்துஒன்றாம்நாள்




Monday, 18 May 2020

முனையடுவார் நாயனார்

தினம் ஒரு அடியார்-50

முனையடுவார் நாயனார்:

வளவர் ஆண்ட பொன்னிவளநாடு மணம்மிக்க மலர்ச்சோலைகள் நிறைந்தது. அந்த மலர்களிலிருந்து வடியும் தேன் ஆற்றில் கலந்தோடும், அந்த ஆற்றுநீரை கொண்டு உழவர்கள் உழவுத்தொழில் புரிவதாதால் அம்மக்களின் வயலில் தேனும், நீரும் கலந்து மகிழ்வான புதுவகை மணம் பரவும். அத்தகைய சிறப்பான பழம்பதி "நீடூர்". இந்த நீடூரில் வேளாளர் குடியில் தோன்றியவர் முனையடுவார் நாயனார்.
இவரது பூசைநாள் : பங்குனி பூசம்.
வயல்களின் உரிமயாளர்களான வேளான்குடியினரின் தலைவர் இவர். ஈசனின் திருவடிகளையே நாள்தோறும் சிந்தித்து, திருத்தொண்டு ஆற்றி வந்தார். இவர் போர்த்தொழில் புரிந்து வந்ததை பெரியபுராணம் வாயிலாய் அறியலாம்.பகைவரை வென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் ஈசனின் அடியாருக்கு நாள்தோறும் அறம் செய்து வந்தார். அதுமட்டுன்றி எந்த மன்னனாவது போரில் ஈடுபட்டு தோற்றபின், தன்னிடம் வந்து பெருநிதியை தந்து போர்புரிய சொன்னால் அதனை பெற்றுகொண்டு போர்வல்லமையுடன், வெற்றி பெற்று கொடுப்பார். அத்தொகையினையும் அடியாருக்கு செலவழிப்பார்.

பலவழிகளில் பெற்ற பணம் யாவையும் அடியார்கள் கேட்ட அளவில் கொடுத்து மகிழ்வார். அடியார்களுக்கு நல்ல உணவும், கறி, நெய், தயிர், பால் என சிறந்த உணவுகளை படைப்பார். இதனை ஒரு நெறியாய் ஏற்று தவறாமல் செய்து வந்தார். இவ்வாறாய் பலகாலமாய் இந்நெறியை விடாமல் பின்பற்றியதால், ஈசனின் பெருங்கருணை பெற்று தம் உலகத்தில் நிலைத்திருக்க செய்தார் சிவபெருமான். வாழ்நாள் முழுவதும் போர்ச்செயலில் ஈடுபட்டதால் இவர் "முனையடுவார்" என பெயர் பெற்றார்.

"அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” 

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#முனையடுவார்நாயனார்
#ஐம்பதாம்நாள்

வாயிலார் நாயனார்

தினம் ஒரு அடியார்-49

வாயிலார் நாயனார்:

இலக்கியங்கள் சிறப்பித்து கூறும், வளமை பொருந்திய, வழிவழியாய் செல்வம் நிறைந்த பதியான திருமயிலைபுரி எனும் தொண்டைநாட்டு மயிலாப்பூரில் வேளாளர் குடியில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: மார்கழி ரேவதி

ஓளிநிறைந்த அழகிய கடற்கரை முழுவதும் மரக்கலங்களில் இறக்குமதி செய்யப்படும் யானைகளும், முத்துக்களும் அவ்வூரின் துறைமுகபட்டினத்தில் வந்து இறங்கும். தெருக்களின்  இருமருங்கிலும் மாடமாளிகைகள் நிறைந்திருக்கும். மயிலையின் தெருக்கள் என்றும் திருவிழாக்களை போல கூட்டம் நிறைந்திருக்கும். நிலையான சிறப்பினைக் கொண்ட திருமயிலாபுரி மாநகரில் மூத்தகுடிகளான வேளாள குடியில் நன்மையடையும் வண்ணம் தோன்றியவர் வாயிலார். இவர் சம்பந்தருக்கும், சுந்தரருக்கும் இடைபட்ட காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவார்.
சிவபெருமானின் திருத்தொண்டில் விருப்பமுடன் ஈடுபட்டு, அன்பின் மிகுதியால் வாழ்ந்து வந்தார்,  இறைவன் கருணையை மறக்க இயலாது, தன் மனதிற்குள்ளாகவே கோவிலைக்கட்டி சிவனை எழுந்தருளச் செய்தார். தன் பக்திசிந்தனையையே சுடர்விளக்காய் ஏற்றி வைத்தார்.அன்பின் ஆனந்தத்தினையே திருமஞ்சனநீராய் கொண்டு தினமும் நீராட்டினார்.

உள்ளத்தாலேயே சிவபெருமானை வழிபட்டு வந்த வாயிலார், அத்தூய வழிபாட்டினை இடையறாது தினமும் செய்து வந்தார். அவரின் பகட்டில்லாத உண்மையான பக்தியினை உணர்ந்த சிவபெருமான், தன்திருவடி நிழலிலே தங்கியிருந்து தன்னை எப்போதும் வணங்கி நிற்கும் பெரும்பேற்றினை அருளினார்.

"துறைக்கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் 
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#வாயிலார்நாயனார்
#நாற்பத்துஒன்பதாம்நாள்


Popular Posts In This Blog