Tuesday, 5 May 2020

திருஞானசம்பந்தர்

தினம் ஒரு அடியார்-28

திருஞானசம்பந்தர்:

காரைக்கால் அம்மையால் தோற்றுவிக்கப்பட்டதாய் கருதப்படும் சைவமதத்தின் பக்திமார்க்க நெறியை சீரியமுறையில் பரவச்செய்த தேவார மூவரில் ஒருவர் ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தர். மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று திருநெறியத் தமிழ் பாடினார். "தோடுடைய செவியன்" எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் பாடத் தொடங்கி கல்லூர்ப் பெருமணம் எனத்தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சி பண் பதிகம் வரை பாடியுள்ளர். இவர் பாடியவற்றுள் இன்று வரை 386 பதிகங்கள் கிடைத்துள்ளன.இவை மூன்று திருமுறைகளாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இவை பண்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. சேக்கிழார் பெரியபுராணத்தில் இவரை குறித்துதான் அதிகம் பாடல் இயற்றியுள்ளார். "வம்பறா வரிவண்டு சருக்கம்" எனும் இரண்டாம் காண்டத்தில் மொத்தம் 1256 பாடல்கள் சம்பந்தர் குறித்து இயற்றியுள்ளார். சோழவளநாட்டில் பிரமபுரம் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம், கழுமலம் என்னும் பன்னிரு திருப்பெயர்களை உடைய அன்று சீகாழி என அழைக்கப்பட்ட சீர்காழியில் சிவஞானபாதஇருதயர்-பகவதி தம்பதிகளுக்கு மகனாய் அந்தணர் குலத்தில் கவுணியர் கோத்திரத்தில் பிறந்தவர் இவர். தந்தை, தாய் இருவரும் புகழ்பெற்ற சைவம் பேணும் தலைமுறைகளில் தோன்றியதால், இயல்பிலேயே தெய்வீககுழந்தையாய் விளங்கினார் சம்பந்தர். ஒருமுறை சிவஞானபாதர் தோணியப்பர் ஆலய தீர்த்தக்குளத்தின் கரையில் சம்பந்தரை அமரச்செய்துவிட்டு தான் குளிக்க, குளக்கரையின் உள்ளே மூழ்கினார். உள்ளேயே மந்திரம் மனதால் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது சம்பந்தருக்கு மூன்று வயது, அச்சம் காரணமாய் குழந்தை பயத்தில் அழுதது.
அப்பொழுது திருத்தோணி நாதர் உமாதேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமாதேவியார் தன் மார்புகச்சை விளக்கி திருமுலைப்பாலை தங்கக்கிண்ணியில் அமுதப்பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுத்தார். அழுகையை நிறுத்தியது குழந்தை.
குளித்துவிட்டு வந்த சிவபாதர் தன் குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைப் பார்த்த போது, யார் கொடுத்தது என்று வினவினார். ஞானசம்பந்தர் தோணியப்பரைக் காட்டினார். அம்மையும், அப்பனும் தாமே வெளிப்பட்டு அருளளித்தமையால் அன்றிலிருந்து, 'ஆளுடைய பிள்ளையார்' எனும் திருப்பெயர் பெற்றார். அப்பொழுது ஞானசம்பந்தர் “தோடுடைய செவியென்” என்ற நட்டபாடை பண்ணில் அமைந்த முதற் பதிகத்தைப் பாடியருளினார். இச்செய்தி தீயாய் சீகாழிக்கு பரவ அனைத்து அந்தனரும் மலர்தூவி தெய்வக்குழந்தை பாதம் பணிந்தனர்.

உமையம்மை அளித்த ஞானப்பாலை உண்ட பிறகு சம்பந்தர் இறைவன் மீது தலந்தோறும் சென்று பதிகங்களைப் பாடிட புறப்பட்டார். திருக்கோலக்கா எனும் தலத்தினை நோக்கி வந்தார். "மடையில்வாளை பாய" எனும் பதிகம் இத்தலத்தில் பாடினார். இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது. பாடலுக்கேற்றவாறு கையால் தாளமிட்டுக் கொண்டு பாடினார். கைநோக தாளமிடுவதைக் கண்ட திருக்கோலக்கா இறைவன் சம்பந்தருக்குப் பொற்றாளம் கொடுத்தார். அந்த தாளத்திற்கு உமையம்மை ஓசைக் கொடுத்தார். இதனால் திருக்கோலக்கா இறைவன் திருத்தாளமுடையார் என்றும், அம்மை ஓசைக்கொடுத்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.( இன்று இவ்விறைவர் சப்தபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்)
திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவரது மனைவியார் மதங்க சூளாமணியாரும் சம்பந்தரின் பெருமை கேள்விப்பட்டு அவரதுபாதம்பணிய சீர்காழி வந்தனர். அவர்கள் வருவதை கேள்விப்பட்ட சம்பந்ர் நேரில் சென்று எதிர்சேவை புரிந்து வரவேற்றார். சம்பந்தர் சீர்காழி இறைவனை யாழிசையால் மகிழ்விக்க அவர்கள் இருவரையும் பணிக்க அவ்வாறே செய்தனர். அவர்களிருவரும் ஆரோகண அவரோகண வகையில் இசையால் ஒன்றி வாசித்தனர். பின் சம்பந்தரின் நட்பை இருவரும் பெற்றனர். இவர்களோடு தலங்கள் பலவற்றிற்குச் சென்று அந்தந்த தல இறைவனைப் பாடிப் புகழ்ந்தார். திருநெல்வாயில் என்ற தலத்திற்குச் சென்ற பொழுது இறைவன் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி, ஞானசம்பந்தன் இங்கு வந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு முத்துச்சிவிகை, குடைச்சின்னம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவரை அழைத்து வருமாறு பணித்தார். அவர்களும் இவற்றைச் சம்பந்தருக்கு வழங்கினர்.
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கிற்று. இவரது தந்தை சம்பந்தருக்கு உபநயனச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தார். உபநயனநாளில் மறையோர்கள் பல வேதங்களை ஓதி, முப்புரி நூலை அணிவித்தனர். அப்பொழுது மறையோர்கள் தமக்கு ஏற்பட்ட சந்தேகத்தைச் சம்பந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். மந்திரம் தோன்றுவதற்குரிய மூலமந்திரம் எது என்று மறையோர்கள் வினவிய பொழுது “மந்திர நான் மறையாகி வானவர்” என்ற திருப்பாட்டின் மூலம் திருவைந்தெழுத்தே மூலமந்திரம் எனச் சிறப்பாக எடுத்துரைத்தார். முயலகன் நோய் தீர்த்தல்: ஞானசம்பந்தர் நாவுக்கரசருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடிப் போற்றினார். மழநாட்டில் காவிரியின் வடகரையிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்த போது அங்குள்ள கொல்லி மழவனின் புதல்வி முயலகன் என்னும் கொடிய நோயால் வருந்தி, கோவில் சந்நிதியிலே உணர்வின்றிக் கிடந்தாள். இதனை அரிந்த சம்பந்தர், “துணிவளர் திங்கள் துளங்கி விளங்க” என்று தொடங்கும் பதிகத்தைப்பாடி அப்பெண்ணின் நோயை அகற்றினார்.

யாழ்மூரி பாடியமை:

ஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடினார். சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த தலமான தருமபுரத்தையடைந்தார். அப்பொழுது திருநீலகண்டரின் உறவினர்கள் தங்கள் யாழ் வாசிப்பினால் தான் ஞானசம்பந்தரின் பாடல்கள் சிறக்கின்றன என்று கூறினர். இதைக் கேட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தரை வணங்கி, தாங்கள் யாழில் வாசிக்க இயலாத ஒரு பதிகத்தைப் பாடி அருள வேண்டும் என்று கூறினார் சம்பந்தர்.
சம்பந்தர் “மாதர்மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். அப்பாடலை யாழில் வாசிக்க இயலாமல் போகவே யாழை முறிக்க முற்பட்ட போது, சம்பந்தர் அதனைத்தடுத்து இது இறைவனின் செயல் என்று கூறினார்.

வாசித்தீரக் காசு பெறுதல்:

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலைச் சென்ற போது, அங்கு கடும் பஞ்சம் நிலவியது. அப்பொழுது திருநாவுக்கரசருக்கு உடனுக்குடன் இறைவன் பொற்காசுகளை வழங்கி வந்தார். ஆனால் சம்பந்தருக்குப்படிக்காசு வழங்குவதில் காலம் தாழ்த்தி வந்தார். அதனை நினைத்து சம்பந்தர் குறிஞ்சிப்பண்ணில் அமைந்த “வாசி தீரவே காசு நல்குவீர்” என்ற திருப்பதிகம் பாடி நற்காசு பெற்று அடியவர்களுக்கு அமுதளித்தார். மேலும், சம்பந்தருக்கு இறைவன் திருவீழிமிழலைக் கோயில் விமானத்திலே திருத்தோணிப் புரத்தைக் காட்டியருளினார். இன்றும் இவ்விமானத்தில் இக்காட்சி காணப்படுகின்றது.

அற்புத நிகழ்வுகள்:

ஞானசம்பந்தர் பாம்பு தீண்டப்பெற்று இறந்த வணிகனை “சடையா யெனுமால் சரண் நீ யெனுமால்” என்னும் பதிகம் பாடி எழுப்பிவித்தார். திருமறைக்காட்டில் மறைகளால் மூடப்பட்டிருந்த மறைக்கதவத்தைத் திருநாவுக்கரசர் திறக்கவும், சம்பந்தர் மூடவும் பாடினர். இத்தலத்தில் பியந்தைக்காந்தாரப் பண்ணில் அமைந்த கோளறு பதிகம் பாடினார்.
மங்கையற்கரசியாரின் அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்றார். ஆலவாய் இறைவனைப் பணிந்தார். வாதுக்கு வந்த சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் செய்து வெற்றி பெற்றார். கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்று தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருநீற்றுப்பதிகம் பாடினார். திருக்கொள்ளம்புதூரில் “கொட்டமே கமழும் கொள்ளம் புதூர் என்று தொடங்கும் காந்தாரப் பஞ்சமம் பண்ணமைந்த பதிகம் பாடி ஓடம் செலுத்தினார்.
திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசரைச் சந்தித்தார். பின்பு தொண்டை நாடு சென்றார். திருவோத்தூரை அடைந்தார். அங்கு ஒரு சிவனடியாரின் பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனையாக இருந்தன. இதனை,
“பூந்தோர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி” எனத் தொடங்கும் பழந்தக்கராகம் பண்ணமைந்த பதிகம் பாடி பெண்பனையாக்கினார். மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக விளங்கிய பூம்பாவையை “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை” எனத் தொடங்கும் சீகாமரப் பண் பதிகம் பாடி பெண்ணாக எழுப்பிவித்தார்.

சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத்தில் பெரியநாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயி லின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி `யான் பெற்ற அரு நிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன்` என உரை த்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந் தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப் படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரை க் கைப்பற்றித் தீவலம் வரும்போது `விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே` என்னும் நினைவினராய்` `இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில்சிவன்தாளை அடைவோம்` என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெரு மணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காணவந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திரு நீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவ சோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவ ரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனு ள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார். அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்

“கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்” எனத் தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம் பாடி திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடன் சோதியில் கலந்தார்.
மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று சைவத்தையும், தமிழையும் ஒருங்கே வளர்த்தவர் தெய்வக்குழந்தையான ஞானனசம்பந்தர்.

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
Reference : tamilvu, பெரியபுராணம்

#தினம்ஒருஅடியார்
#ஆளுடையபிள்ளையார்
#இருபத்தெட்டாம்நாள்




No comments:

Post a Comment

Popular Posts In This Blog