Saturday, 30 May 2020

இசைஞானி அம்மையார்

தினம் ஒரு அடியார்-62

இசைஞானி அம்மையார் புராணம் :

சோழவளநாட்டின் திருவாருர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் கமலாபுரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் ஆதிசைவர் மரபில் பிறந்து சடைய நாயனாரை மணந்தார். 
இவரது பூசைநாள் : சித்திரை-சித்திரை

[ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் 
 அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்  
 இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் 
 மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்]

முடிவில்லாத பெருமைமிக்க சடையனாரை மணந்து, எவ்வகையானும் அழிக்க முடியாத மூன்று கோட்டைகளை சினந்து அழித்த சிவபெருமான் ஆட்கொண்டருளிய நம்பியாரூரன் எனும் சுந்தரரை பெற்றெடுத்த சிறப்பினையுடையவர் இசைஞானியர் ஆவார். இதனாலேயே இவர் அடியாராய் வைத்து போற்றக்கூடிய நிலையில் சேக்கிழார் போற்றுகிறார்.

"இசைஞானி காதலன் திருநாவலூர்கோன் அன்னவனாம் 
ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக்கன்பராவரே"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம்: Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#அறுபத்துஇரண்டாம்நாள்
#இசைஞானிஅம்மையார்நாயனார்


Friday, 29 May 2020

சடைய நாயனார்

தினம் ஒரு அடியார்-61

சடைய நாயனார்:

இவ்வுலகில் நிறைய ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.எல்லாமே இறைவனைப் பற்றித்தான் பேசுகின்றன. 

 தாதமார்க்கம்(தாச மார்க்கம்), சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்,
சன்மார்க்கம் என்பன சிவபிரானை அடையும் நன்மார்க்கங்கள்
ஆகும். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம்  என்ற
பெயராலும்     வழங்கப்     பெறுதல் உண்டு. 
இம்மார்க்கங்களில் சகமார்க்கத்தினை சுந்தர் பெருமானார் பின்பற்றினார். இந்நெறி யோகமார்க்கம் எனவும் கூறப்பெறும்.யோகம் என்பதற்குப் பொருள் ஒன்றுதல் என்பதாகும்.
அதாவது உயிரானது இறைவனோடு ஒன்றியிருப்பதே யோகநிலை. 
இறைவனோடு ஒன்றிவிடுகின்ற காரணத்தால் இறைவனுக்குத்
தோழமையாகின்ற அருள் கிடைக்கின்றது. எனவேதான்
இந்நெறி தோழமை நெறி எனப்படுகிறது. இந்நெறியை "உயிராவணம்"
என்று தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலும், "தேடுவேன்
தேடுவேன்"என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடலும் குறிப்பிடுகின்றன.

இத்தகைய சிறப்புமிக்க சகமார்த்தை கடைபிடித்து ஒழுகிய பார்புகழும் சுந்தரமூர்த்தி நாயனாரை நமக்கு அளித்தவர் சடையநாயனார் ஆவார்.
இவரது பூசைநாள்: மார்கழி திருவாதிரை
இவர் ஆதிசைவகுலத்தில் தோன்றியவராவார்.

[தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர்
 கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் 
 எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம் 
 நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ]

தம்முடைய தலைவராகிய சிவபெருமானையே தமக்கு தோழராய் கொண்டருளி பின் அவரையே தம் பரவையாரிடத்தூ தூதாக செல்லும்படி ஏவல் கொண்டருளியவரும், சேரமான் பெருமாளின் உற்ற நண்பருமாகிய நம்பியாரூரரை உலக உயிர்கள் உய்யும்பொருட்டு அளித்ததால் சடையரை நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் நிலையை அடைந்தார்.


"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்"  

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#சடையநாயனார்
#அறுபத்துஒன்றாம்நாள்

Thursday, 28 May 2020

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

தினம் ஒரு அடியார்-60

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள ஊர் ராஜேந்திரபட்டினம் இவ்வூர் அன்று திருஎருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்டது. இவ்வூரில் பாணர் மரபில் பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். 
இவரது பூசைநாள்: வைகாசி மூலம்

பாணர் மரபு:
சங்க இலக்கியங்கள் பலவகையான பாணர் சமுதாயங்களை காட்டுகின்றன. சங்ககாலத்தில் நாடோடிப்பாடகர்களாகவும், பல்வேறு கலைஞர்களாகவும் இருந்துள்ளனர்.
பாணர்கள் ஊர்ஊராய் சென்று பாடிப் பிழைப்பவர்கள் என்பதனை பொருநராற்றுப்படை நேரடியாகவே சுட்டுகிறது. சங்கநூல்களில் ஆற்றுப்படை நூல்களே அலைகுடி(நாடோடி)கள் மற்றும் நிலைகுடிகளைப்பற்றி விரிவாய் கூறுகிறது! வையாற்றின் நீர்த்துறைகள் தோறும் பாணர் அமர இருக்கைகள் இருந்துள்ளது! இதனை பரிபாடலும், மதுரைக்காஞ்சியும் கூறுகிறது! இக்குழுவினர் சேர, சோழ, பாண்டியரை விட குறுநிலமரபான வேளிர்களையும் நிலக்கிழார்களையுமே நாடி வாழ்ந்துள்ளனர். தங்கள் பயணங்களில் கானகர், குறவர், கொடிச்சியர், எயினர் போன்றவர்களிடம் உண்டு, உறவாடி வாழ்ந்துள்ளனர். இன்றைய நாடோடிக் குழுக்கள் போல் தம் பணியை சுருக்காமல் வேளாண்மை, தூதுசெல்லுதல், நெசவு போன்ற பல பணிகளை செய்துள்ளனர். இவர்களின் வாய்மொழியினாலேயே பல எளிய கதாநாயகர்களின் மக்களிடையே பரவின. இன்றும் தென்தமிழகத்தில் அழகர் மாட்டுக்காரர்கள் வள்ளி, தெய்வானை கதைகளையும், வடதமிழகத்தில் தேசிங்குராஜன் கதை, காத்தவராயன், முத்துப்பட்டன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற சிறுதெய்வங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் கூத்துக்கலைஞர்களே அன்றைய பாணர்கள்.

திருஎருக்கத்தம்புலியூரில் நிலைபெற்று வாழ்ந்து வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் சிவபெருமானின் பெருமைகளை தன் யாழின் இசையால் பரப்பினார், வளம்மிக்க சோழநாடு எங்கும் சென்று அனைத்து கோவில்களிலும் தம் யாழிசையால் ஈசனின் பெருமைகளை பாடினார். திருநீலகண்டரின் இசையால் மனம் பறிகொடுத்த மதுரையம்பதி இறைவன் சொக்கன் தம் பக்தர் கனவுகளில் தோன்றி திருநீலகண்டரை அழைத்துவருமாறு பணிக்க அவரும் தன் மனைவி மதங்கசூளாமணியாருடன் மதுரை வந்து
இறைவரது விருப்பப்படி பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் புகுந்திருந்து அவரது மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். தரையினில் குளிர்ச்சியினால் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும், எனவே பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் அசரீரி வாக்கினால் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப் போற்றினார்.அதன்பின் தேவர்கள் போற்றும்படி பல சிவத்தலங்களை அடைந்து தியாகராஜப் பெருமானை தரிசிக்க எண்ணி ஆரூர் வந்தடைந்தார்.

மெய்மறந்து சிவனின் புகழை தம் யாழின் இசையால் பாடினார்.பாணரது இன்னிசைக்கு உவந்து ஆரூர் அண்ணலார், பாணர் உட்சென்று வழிபட, மூடியிருந்த  வடதிசையில் வேறொரு வாயிலை உண்டுபண்ணினார். பாணர் அவ்வழியே புகுந்து வணங்கினார்.
மூலஸ்தானமாகிய கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி சிலகாலம் அங்கேயே தங்கியிருந்து அதன்பின் திருவாரூரை விட்டு நீங்கி பலதிகளை சென்று வணங்கினார்.
அதன்பின் ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தரை வணங்க விரும்பி சீகாழிப்பதியை அடைந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் வீற்றிருக்கும் பல திருத்தலங்களை அடைந்து வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வந்த யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூடிய  அடியார் திருக்கூட்டத்துடன்  பெருஞ்சோதியினுள் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்று,
இறைவன் திருவடிநிழலை அடைந்தார்.

"திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#திருநீலகண்டயாழ்ப்பாணர்
#அறுபதாம்நாள்

Wednesday, 27 May 2020

கோச்செங்கட்சோழ நாயனார்

தினம் ஒரு அடியார்-59

கோச்செங்கட்சோழ நாயனார்:

புறாவின் உயிரைக்காக்க வேண்டி தூலாத்தட்டில் தன் சதையை அரிந்து அளித்தவர்  சிபிச்சக்கரவர்த்தி, சிபியின் கதை பௌத்த ஜாதகக் கதைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பினது. அத்தகைய உரிமையான உருத்தான சோழ மரபில் தோன்றியவர் கோச்செங்கட்சோழன்! 
இவரது பூசைநாள் : மாசி சதயம்

கோச்செங்கன் காலம்:
இவர் சங்ககால சோழர்களில் காலத்தால் பிந்தியவராய் கருதப்படுகிறார். புறநானூற்று பாடல் ஒன்றும், பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது எனும் நாற்பது பாக்களும் இம்மன்னனை குறித்து வரும் தொன்மையான பாடல்களாகும். இவை இரண்டிலும் நிறைய முரண்கள் உள்ளது.  புறநானூற்று 74 ஆம் செய்யுள் அடிக்குறிப்பு, கணைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுளின் அடியில், "இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டரசளித்தான்" என்று குறிக்கப்பெற்றுள்ளது. களவழி நாற்பது 4-5 நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது!சோழன் கோச்செங்கணானின் காலத்தை நிறுவுவதில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியும், திருமுறைகளும் பெரிதும் உதவுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில் பத்துப்பதிகப் பாடல்களிலும் கோச்செங்கணானைப் பாடிப் பரவியுள்ளார். திருமங்கையாழ்வார், சம்பந்தர் செங்கனானின் பலபோர்களை சிறப்பித்து கூறுகின்றனர். ஆனால் இவற்றினைபற்றி சங்ககால புலவர்கள்  எதுவும் பாடவில்லை. இதிலிருந்து சங்க காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவன் கோச்செங்கனான் என்று துணியப் போதுமானதாகும். மேலும் செங்கனான்  சங்ககாலத்தில் 70 மாடக்கோவில்களை கட்டினான் என்றால்  சைவமதம் மிகவும் மகோன்னதமாய் இருந்திருக்கும்! ஆனால் இதனைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. மேலும் இவனது பெற்றோராக சுபதேவன் -கலாவதி என பெரியபுராணம் கூறுகிறது!  இப்பெயர்கள் வடமொழிப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் இப்பெயர்களை நாம் எங்கும் காணவே இயலாது. எனவே சங்க காலத்திற்குப் பிற்பட்டும், சிம்ம விஷ்ணுவின் பல்லவப் பேரரசு அமைவதற்கு முற்பட்டும் அமைந்த ஒரு காலகட்டத்தில் (கி.பி. 300 - கி.பி. 600) இம்மன்னன் வாழ்ந்ததாகக் கொள்வதே பொருத்தமுடையது. 

சோழநாட்டினை வளம்கொழிக்கச் செய்யும் பொன்னிநதி பாயும் வெள்ளைநாவல் மரத்தின் கீழ் ஓர் சிவசொரூபமான லிங்கம் இருந்தது.  இதனை வெள்ளைநிறம் பொருந்திய யானை ஒன்று பூவும் நீரும் கொண்டு அர்ச்சித்து வந்தது. இவ்வாறான செயலால் அத்தலத்திற்கு "திருவானைக்கா" எனும் பெயர் வழங்கலாயிற்று. அந்நிலையில் ஈசனின் மேனி வெயிலில் படாவண்ணம் சிலந்தி ஒன்று தன்இழைகளால் மேற்கூரையொன்றை அமைத்து வந்தது.
இது அடாதசெயல் என கருதிய யானை அக்கூட்டினை கலைத்தது.  சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடர்ந்தது.தினந்தோறும் இந்நிகழ்வு தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. கடிவேகம் தாங்காது தும்பிக்கையை வேகமாய் தரையில் அடித்தது. நிலைகுலைந்த யானை இறக்க, உள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது. இருவரின் பக்தியை மெச்சிய ஈசன் யானையை கணத்தில் ஒருவனாகவும், சிலந்தியை சுபதேவன்-கமலவதிக்கு மகனாய் படைத்தார். கோச்செங்கனான் பிறக்கும் தருவாயில் கிரகபலன்களை ஆராய்ந்த சோதிடர்கள் கமலவதியிடம் சென்று ஒருநாழிகை கழித்து குழந்தை பிறந்தாள் இக்குழந்தை உலகை ஆள்வான்  எனகூற, அம்மாதரசி தன்காலில் கயிற்றைக்கட்டி தலைகீழாய் தொங்கி, சோதிடர் கூறிய நாழிகை கழிந்ததும், குழந்தையை ஈன்று இறவாப்புகழையடைந்தார். செங்கனான் பருவம் வந்ததும் அரசனாய் முடி சூட்டிக் கொண்டார், சிவபெருமானின் மேல் பேரன்பு கொண்டு திருப்பணியில் ஈடுபட்டார். சிவன் கோவில் மட்டுமின்றி வைணவக்கோவில்களையும் கட்டி சமயப்பொறையுடன் திகழ்ந்தார்.
திருவானைக்கா பதியில் தான் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்ததை ஈசன் அருளால் உணர்ந்த செங்கனான். நாவல் மரத்தின்கீழே அமர்ந்த ஈசனை அவ்வாறே இருக்கச்செய்து அழகிய கோவிலொன்றை எழுப்பினான்.

[ஆனைக் காவிற் றாமுன்னம் அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்]

 இக்கோவில் 1600 ஆண்டுகள் கடந்தாலும் இறைவர் இன்றும் அவ்வாறே மரத்தின் கீழே உள்ளது சிறப்பானது. அது மட்டுமின்றி சோழநாட்டில் அழகு நிறைந்த மாடக்கோவில்கள் பல தோற்றுவித்தார்.
அம்பர், வைகல், நன்னிலம் முதலான இடங்களில் கோயில் எடுத்தவன் கோச்செங்கனான் என்று, சுந்தரரும், சம்பந்தரும் பாடிய தேவாரப் பாடல்களும் சான்று பகர் கின்றன.

கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன.  இவற்றை புராணம் தவிர்த்து ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். காவிரிக்கரை நெடுக இவன் சிவ-வைணவ ஆலயங்களை மாடக்கோவில்களாய் எழுப்பியதன் காரணம், ஆன்மிக நோக்கு மட்டுமல்ல. காவிரியில் வெள்ளம் வந்து அடிக்கடி சோழநாட்டு மக்கள் இன்னலுற்றனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். மக்களும் பலியாக நேரும்.  அதுபோல் கோவிலும் வெள்ளத்தில் அழிந்துபோய்விடும். அக்காலத்தில் கோவில்கள் செங்களாலும், மரத்தாலுமே கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உண்டு, இதனாலேயே இச்சோழ மாமன்னன் தான் எழுப்பிய ஆலயங்களை அழியாவண்ணம் தளம் உயர்த்தி மாடக்கோயில்களாக அமைத்துள்ளான். மேலும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகைகள் பலவற்றை இவன் கட்டி கொடுத்துள்ளான்.

சிவபெருமானின் திருத்தொண்டு பலஆற்றிய செம்பியர்கோனான கோச்செங்க நாயனார், பூவுலகை ஆண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து அதன்பின் தில்லை கூத்தனின் திருவடிநிழலை அடைந்தான்.

"தென்னவனாய் உலகாண்ட செங்கனார்க்கு அடியேன்"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கோச்செங்கட்சோழநாயனார்
#ஐம்பத்துஒன்பதாம்நாள்

Tuesday, 26 May 2020

நேச நாயனார்

தினம் ஒரு அடியார்-58

நேச நாயனார்:

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள ஊர் கம்பிலி, அன்று இந்த ஊர் காம்பீலி என அழைக்கப்பட்டது. அன்பும், வாய்மையும் ஒருங்கே அமைக்கப்பட்டது இவ்வூர்.மலைமேகங்கள் வந்து விரும்பி தழுவும் உயரத்தில் மாடமாளிகைகள் நிரைந்த ஊர் இது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊரில் அறுவையர்(சாலியர்) குலத்தில் தோன்றியவர் நேச நாயனார். கன்னடத்தில் இவரை நைசபக்தரு என அழைக்கின்றனர். 
இவரது பூசைநாள் : பங்குனி ரோகினி
தம் குலத்தொழிலில் மேம்பட்ட நிலையை அடைந்தாலும், ஈசனின்  திருவடிகளை தம் தலையினில் போற்றும் தன்மையராய் விளங்கினார். தாம் தொழிலில் ஈடுபடும்பொழுது தன் செயலை சிவனாரின் திருவடியில் வைத்து அதன்மூலம் எழும் வாக்கினை "திருவைந்தெழுத்தாக" ஓதியபடி செய்து முடிப்பப்பார்.

 "நமசிவாய" எனும் மந்திரமே  திருவைந்தெழுத்து எனப்படும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

திருவைந்தெழுத்தினை 5ஐந்து வடிவங்களாகக் கொள்கின்றனர். அவை 
தூல பஞ்சாட்சரம் =நமசிவய
சூட்சும பஞ்சாட்சரம் =சிவயநம
ஆதி பஞ்சாட்சரம் = சிவயசிவ
காரண பஞ்சாட்சரம் = சிவசிவ
ஏக பஞ்சாட்சரம் = சி

அவ்வகையில் முடிக்கப்பட்ட கைத்தொழிலின் பயனாக உடை, கீள் மற்றும் புதியகோவணம் ஆகியவற்றை செய்து முடிப்பார். அவ்வாறு நெய்த உடைகளை சிவனடியார்களுக்கு வாரி வழங்கி வந்தார். இவ்வாறான இறைத்தொண்டினை இடைவிடாது செய்துவந்த நேசனார் சிவபெருமானின் திருவருளால் அவரது திருவடிநிழலை அடையும் பெரும்பேறு பெற்றார்.

“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#நேசநாயனார்
#ஐம்பத்துஎட்டாம்நாள்

மங்கையற்கரசியார்

தினம் ஒரு அடியார்-57

மங்கையற்கரசியார்:

மங்கையற் இனத்திற்கே தனனி அரசியாய் விளங்கும் தகுதியுடையவர், சோழர் குலத்திற்கே கொழுந்து போன்றவர். தென்வன் குலமான பாண்டியர் குலத்திற்கு ஏற்ப்பட்ட பழியினை போக்கிய தெய்வீகம் பொருந்திய பெண்ணரசியாவார். தெய்வீக குழந்தையான ஞானசம்பந்தரின் திருவருள் துணைசெய்ய. தமிழ்நாடு அடைந்த துயரினை போற்றியவர். 

[எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே ]

பொதுவாக தமிழக முன்னாள் முதல்வர் திரு.அண்ணா அவர்கள்தான் நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயர் வைத்ததாய் ஓர் கருத்துண்டு. ஆனால் 12ம் நூற்றாண்டளவிலேயே முதன்முதலாய் சேக்கிழார் பிரான் "தமிழ்நாடு" என்று பதிவு செய்கிறார்.

சோழநாட்டின் பழையாறையில் தோன்றிய்வர் இவர். இவரது தந்தையார் மணிமுடிசோழனாவார். 
இவரது பூசைநாள்: சித்திரை ரோகினி
அரிகேசி பாண்டியரின் மனைவியாதலால் இவரது காலம் கி.பி 7ம்நூற்றாண்டாகும்.
சமணநெறி தழைத்தோங்கிய பாண்டியமண்ணில், அரிகேசி பாண்டியனுக்கு மனைவியாய், பாண்டிய மண்ணின் அரசியாய் வீற்றிருந்து, தம் கணவருக்கு ஏற்ப்பட்ட கொடிய வெப்புநோயினை, சம்பந்தர் பிரானின் அருளால் அந்நோயை நீக்கி, பாண்டிய மண்ணில் சைவநெறி தழைத்தோங்க செய்தவர். குற்றமற்ற அம்மன்னனுடையே சேர்ந்து ஈசனின் திருவடி நிழலை அடைந்தவர்.

"வரிவளையாள் மானிக்கும் அடியேன்"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியயேய் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#மங்கையற்கரசிநாயனார்
#ஐம்பத்துஏழாம்நாள்

Sunday, 24 May 2020

பூசலார் நாயனார்

தினம் ஒரு அடியார்-56

பூசலார் நாயனார்:

நல்லொழுக்கம் பேணும் சான்றோர் பலர் நிறைந்த தொண்டை நாட்டினில், நாள்தோறும் நலமான நான்கு வேதங்களும் நிலைபெற்று வழங்கிவரும் பழமையானபதி திருநின்றவூர். இவ்வூரில் அந்தணர் குலத்தில் தோன்றிய மாமணி பூசலார் நாயனார்.
இவரது பூசைநாள் : ஐப்பசி அனுஷம் சுந்தரரின் சமகாலத்து நாயன்மார் இவர், இவரின் காலம் கி.பி 8ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
தம் சிந்தையில் தோன்றும் உணர்வுகள் யாவற்றையும் ஈசனின் திருவடியில் சென்று சேர்த்து நின்றார். ஈசனின் அன்பிற்கு உகந்த அடியார்களுக்கு செய்யும் தொண்டே ஈசனுக்கு செய்யும் தொண்டு என்று நினைத்து வாழ்ந்து வந்தார். ஈசனுக்கு தாம் கோவில் கட்டியே தீருவேன் என்று மனதில் ஓர் எண்ணம் கொண்டு அந்த நினைப்பாகவே வாழ்ந்து வந்தார். அவ்வாறு கோவில்கட்ட அவருக்கு பெருநிதி அவருக்கு இல்லையெனினும், எப்படியும் கட்டியே ஆவது என உறுதிபூண்டார். ஒரு கோவில் கட்ட தேவையான பொருட்களை தன் உள்ளத்திலேயே சேர்த்துக்கொண்டு வந்தார்.

[சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி  
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே   
ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்  
காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்]

மனதளவிலேயே எல்லா பொருட்களையும் சேர்த்தபின், ஆகமப்படி கோவில்எழுப்ப தச்சரை அழைத்துக்கொண்டு வந்து நல்லநாளில் அஸ்திவாரம் தோண்டினார். அல்லும் பகலும் அயராது அடிமுதல் உபானம் வரையில் கோவில் கட்டினார், விமானத்துடன் சிகரமும் கட்டி முடித்தார்

(நிஜம் எது? கற்பனை எது? என உணரா நிலையை மாயபுலன் உணர்வுகள், என்றும் பிறழ்நம்பிக்கை(hallucination, delusion) என்றும் அழைக்கப்படுகிறது)

ஒருவாறு கோவிலுக்கு மதில்கள், சுண்ணம் முதலான சாந்துகள் பூசி, திருக்குளம் எழுப்பி அனைத்து விதமான பணிகளையும் முடித்து இறைவனையும் பிரதிஷ்டை செய்ய எண்ணும் வேளையில், காடவர்கோன் காஞ்சியில் பெரும் பொபெருட்செலவில் கோவில் ஒன்றை எடுப்பித்திருந்தான். 
இக்காடவர்கோனே நாம் முன்னர் பார்த்திருந்த கழற்சிங்க நாயனார் எனும் ராஜசிம்மபல்லவன். பூசலார் புராணத்தில் வரும் காடவர்கோன் கட்டிய கோவில் என்பது தற்போது காஞ்சிநகரில் உள்ள உலகப்புகழ்பெற் கைலாசநாதர் கோவிலே.

சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது. மூன்றுதளங்களைக் கொண்டு கட்டப்பட்டது இக்கோவில். கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார அறை எனும் புதிய நுட்பத்தை புகுத்தப்பட்ட கோவில். திருச்சுற்று மாளிகை முழுவதும் சுற்றிலும் நான்கு திசைகளிலும் 58 சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. இச்சிற்றாலயங்களின் உள்ளே சோமாஸ்கந்தர் சிற்பம் இடம் பெற்றுள்ளது.கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் மிகப்பெரிய அளவில் சிவவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கில் தென்முகக் கடவுளான தெட்சினாமூர்த்தியும், மேற்கில் கங்காளர், வடக்கில் கங்காதரர் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். இறைவனின் மலரை முகர்ந்ததாய் குற்றம் சாட்டி இவளது மூக்கினை.தான் செருத்துணையார் அரிந்து விடுவார். பல்லவருக்கும் சாளுக்கியருக்கு பகை உச்சத்திலிருந்த சமயம் அது. இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியை வெல்வதற்காக படையெடுத்து வரும்பொழுது புதுப்பொலிவுடன் காணப்படும் கைலாசநாதர் கோயிலைக்கண்டு வியந்து, அதன் வழிபாட்டிற்காக தானம் அளித்தான். அழிக்க வேண்டும் என்று வந்த மன்னன் மனம்மாறியதை இங்கு காணும் அம்மன்னனின் கன்னடக் கல்வெட்டு கூறுகிறது. 

விக்கிரமாதித்தனுடன் வந்த தேவி லோக மகாதேவி இக்கோயிலைக் கண்டு போற்றி இதே போன்ற கோயிலை கர்நாடக மாநிலத்தில் பட்டடக்கல் என்ற இடத்தில் எழுப்பினாள். "லோக மகாதேவீசபுரம்' என்று அக்கோவில் அன்று அழைக்கப்பட்டது. இச்செய்திக்கு ஆதாரம் இல்லையெனினும் பட்டடக்கல் விருபாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை போன்றே இருக்கும்

அன்று இரவு மன்னர் கனவில் தோன்றிய ஈசன், பூசல் எனும் பெயருடையஎம் அன்பன் ஒருவன் இடைவிடாத சிந்தனையால் எமக்கொரு கோவில் கட்டியுள்ளான். ஆகவே யாம் நாளை அங்கு எழுந்தருளவுள்ளோம்! நீ இங்கு குறித்துள்ள செயலை நாளை மறுநாள் வைத்துக்கொள்வாயாக! என கூறி மறைந்தார்.
திடுக்கிட்டு விழித்த மன்னன், உடனே பூசலாரின் இல்லம் தேடி விசாரித்து சென்றான். பூசலாரை அடைந்து அவரிடம் தாம்கண்ட கனாவை கூறினான். அதைக்கேட்டு ஆனந்தமடைந்த பூசலார் இந்த எளியோரின் மேல் இருந்த ஈசனின் கருணையை எண்ணி வியந்து போற்றினார். ஈசனே விரும்பி உறையும் அக்கோவிலை தான் பார்க்க எண்ணி பூசலாரிடம் மன்னன் கேட்க, தான் கோவில் கட்ட எண்ணியதையும், அதற்குரிய பொருள் இல்லாமையால்
 மனதில் தான் கட்டிய கோவிலினையும் கோவில் கட்டிய விதத்தினையும் விரிவாக எடுத்துகூறினார்.
 பூசலாரின் பக்தியை மெச்சிய காடவர்கோன் அவரின் திருவடியை பணிந்து வணங்கினார். அதன்பின் தன்மூதூரை அடைந்தார்.
ஈசன் கூறிய அந்நாளில் பூசலாரின் மனக்கோவிலில் சிவபெருமானை எழுந்தருளச்செய்தார். மேலும் அடுத்தடுத்து ஆற்றவேண்டிய பூசைநெறிகளை தவறாது செய்து முடிவில் தில்லைக்கூத்தனின் திருவடிநிழலை அடைந்தார்.

"மன்னிய சீர் மறைநாவல் நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

காஞ்சிகோவில் புகைப்படங்கள்: 
Murugaraj balu
Yaazh photography

#தினம்ஒருஅடியார்
#பூசலார்நாயனார்
#ஐம்பத்துஆறாம்நாள்



Popular Posts In This Blog