Sunday, 31 May 2020

சுந்தர மூர்த்தி நாயனார்

தினம் ஒரு அடியார்-63

சுந்தர மூர்த்தி நாயனார்:

திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் அவதரித்தவர் "நயத்திற்கு சுந்தரனார்" என நவிலப்பெறுபவர் நம்பியாரூரார்.
இவரது பூசைநாள்: ஆடி-சுவாதி
சடையநாயனாருக்கும், இசைஞானி அம்மைக்கும் தவப்புதல்வனாய் பிறந்தார். ஆதி சைவகுலத்தில் பிறந்த இவரை, அவ்வூரை ஆண்ட மன்னன் நரசிங்க முனையர் இளம்வயதில் சுந்தரரின் தெய்வாம்சம் கண்டு தானே வளர்க்க விரும்பி நட்புரிமையில் நம்பிஆரூரரின் பெற்றோரிடம் கேட்க அவர்களும் இசைந்தனர். அரண்மேனையில் வசித்தாலும் அந்தணர்க்குழந்தையாகவே வளர்ந்தார். திருமண வயதடைந்ததும், புத்தூரில் வசித்து வரும் சடங்கவி சிவாச்சாரியாரின் புதல்வியை மணமுடிக்க ஏற்பாடு செய்தனர். மணநாளும் வந்தது! 

தடுத்தாட்கொண்டார்:

மணமேடையில் அமர்ந்திருந்தனர் மணமக்கள். மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். சினம் கொண்ட சுந்தரர் அந்தணூருக்கு அந்தணர் எவ்வாறு அடிமையாக முடியும்? என்றார்.முதியவரின் ஓலைச்சுவடியை கைப்பற்றி கிழித்தார் சுந்தரர். உடனே முதியவர், அறநெறி தவறி என் ஓலையை கிழித்ததனால் இவர் அடிமையென்பதை மெய்பித்துவிட்டார், இது நகல் ஓலையே! அசல் எனது ஊரான திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது என்றார். சுற்றத்தார் முதியவரை எந்த ஊர் என விசாரித்து, அசல் ஓலையை பார்க்க முடிவெடுத்தனர். திருமணம் தடைப்பட்டது, சுந்தரரையும் சுற்றத்தாரையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய்நல்லூர் அடைந்தனர். சபையோர் முன்னிலையில் அசல்சுவடியை காட்டினார் முதியவர். "திருநாவலூரில் இருக்கின்ற ஆதிசைவனாகிய ஆரூரன் என்கின்ற நான் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கின்ற பித்தனுக்கு நானும் என் சந்ததியாரும் வழித்தொண்டு செய்வதற்கு உள்ளும் புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன் இப்படிக்கு ஆரூரன்" என்று எழுதியிருந்தது. பின்பு அந்த ஓலையிலே சாட்சிகளாகக் கையெழுத்து இட்டவர்கள் தங்கள் கையெழுத்தென்றே ஒத்துக் கொண்டார்கள். அதைக் கண்ட பிராமணர்கள் சுந்தரமூர்த்தியை நோக்கி, "இது உம்முடைய பாட்டனுடைய எழுத்தோ! பாரும்" என்று சொல்ல; ஐயர் அவர்களைப் பார்த்து, "இந்தச் சிறுவன் அடிமையோலையில் எழுதப்பட்டிருக்கின்ற தன் பாட்டன் கையெழுத்தைக் கண்டறியச் சக்தியுள்ளவனோ? இவன் பாட்டன் எழுதிய வேறு கைச்சாத்து உண்டாகில், வருவித்து இதனுடன் சரிபார்க்க என்றார். அவ்வாறு சரிபார்த்ததில் அது சரியாக இருந்தது. ஊராரும் வேறு வழியில்லை நீ அடிமை சேவகம் பண்ண வேண்டியதுதான் என கூறினர். என் விதி இதுவெனில் நான் பணிகிறேன் என்றார்.அப்போது அனைவரும் ஐயா! உமது வீடு எங்கே என முதியவரை வினவ, இதோ இங்குள்ளது என கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருவதிகை சென்றார் அங்கு வயோதிக வேடம்பூண்டு விளையாட்டு காட்டினார் ஈசர், பின் சுந்தரரை தம் தோழராய் ஏற்றுக்கொண்டார். ஆகவே தம்பிரான் தோழர் எனும் பெயர் பெற்றார்.அதன்பின்

பரவைநாச்சியாருடன் திருமணம்:
 திருக்கோலக்காவுக்கும், திருப்புன்கூருக்கும் போய்த் திருப்பதிகம்பாடி, காவேரி நதியின் கரையை அடைந்து, அதில் ஸ்நானம் பண்ணி மாயூரத்துக்கும், அம்பர்மாகாளத்துக்கும், திருப்புகலூருக்கும் போய்த் தரிசனஞ் செய்துகொண்டு,திருவாரூர் சென்றார் அங்கு பரவைநாச்சியாரை கண்டு அவர்மேல் காதல் கொண்டார். வெகுவிமரிசையாக திருமணம் நடந்து இல்வாழ்க்கை மேற்கொண்டார்.

திருத்தொண்டர்தொகை:

 அருள்நிறைந்த,திருவாரூரின் 'தேவாசிரியன்' மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களை காணாது, இறைவனை வணங்கச் சென்றார் வன்றொண்டர்(சுந்தரர்), அதுகண்ட விறன்மிண்டர், “தேவாசிரியனிடத்து பொலிந்து விளங்கிய திருத்தொண்டர்களை வணங்காது சென்ற வன்தொண்டன் புறகு. அவருக்குப் பிரான் ஆகிய இறைவனும் புறகு” என்றார்.

"நாம் உள்ளது அடியாருடன் மட்டுமே,அவர்தம் பெருமையை பாடுவீராக"
என்றுரைத்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுத்து, திருத்தொண்டர்த்தொகையை பாட வைத்து தன் அருளையும் அளித்தார் சுந்தரருக்கு.
அதன்பின் உலகமும்,நாமும் உய்ய நாயன்மார்களின் புகழை பறைசாற்ற, திருத்தொண்டத்தொகையை பாடி, தேவாசிரிய மண்டபத்திலுள்ள அடியார்களை தொழுது வணங்கினார்.

சங்கிலி நாச்சியாருடன் திருமணம்:

திருவொற்றியூரில் ஞாயிறு கிழார் என்பவரின் மகள் சங்கிலி நாச்சியார். இவ்வம்மை மணந்தால் சிவனடியார் ஒருவரையே மணப்பேன் என வைராக்யம் கொண்டிருந்தார். சுந்தரர் திருவொற்றியூர் வரும்பொழுது இவ்வம்மையை கண்டு காதல் கொண்டார். தம் காதல் எண்ணத்தை சிவனிடம் தெரிவித்தார், சங்கிலி நாச்சியாரின் கனவில் தோன்றிய ஈசன், உம்மை பிரியமாட்டேன் என மகிழமரத்தின் கீழ் சத்தியம் கேள் என கூறினார். அதனை சங்கிலியார் சுந்தரரிடம் கூற அவரும் சம்மதம் தெரிவிக்க, இருவரின் திருமணமும் நடைபெற்றது. சில நாள் கழித்து திருவாரூர் செல்லவேண்டும் என கூறி சங்கிலியாரிடம் விடைபெற்று பிரிந்தார். சத்தியத்தை மீறியதால் தம் இருகண் பார்வையை இழந்தார். திருவெண்பாகம் எனுமிடத்தில் இறைவன் ஊன்றுகோலை அளித்தார். திருமுல்லைவாயில் நாயகரை வணங்கி நின்று, “சங்கிலியின் பொருட்டு என் கண்களை மறைத்தீர்’’ என்ற தன்மை விளங்கும்படி திருப்பதிகம் பாடியருளி, “எனது துயரினைக் களைந்திட வேண்டும்’’ என்று துதித்தார். பின் காஞ்சி நகரை அடைந்து பணிந்து “விண்ணவர்களுக்காக விடத்தினை உண்டு அமுதத்தை அளித்த கண்ணாளா! கச்சி ஏகம்பனே! கடையேனாகிய நான் செய்த குற்றத்தைப் பொறுத்தருளி இங்கு அடியேன் காணும்படி கண் அளித்தருள வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டு கீழேவீழ்ந்து வணங்கினார், கச்சியம்பதியில் ஒருகண் பார்வை பெற்றார். பின் திருப்பூந்துருத்தி சென்று மறுகண் பார்வையை பெற்றார். இறுதியில் திருவாரூர் சென்றடைந்தார். ஆனால் அங்கு பரவையார் சுந்தரர் மேல் கடுங்கோபத்தில் இருந்தார். சுந்தரரை வீட்டினுள் அனுமதிக்கவேயில்லை. தியாகேசரிடம் வேண்டி, தன் பொருட்டு பரவையாரை ஆறுதல்படுத்த வேண்டினார். ஈசனும் அடியார் வேடம்பூண்டு பரவைநாச்சியைரை சந்தித்து இருமுறை தூது சென்றும் மனம் மாறவில்லை. எனவே அடுத்தமுறை தேவர்கள் படைசூழ சென்றார். பரவைநிச்சியார் அப்போது வந்தது ஈசன் என்று உணர்ந்தார். மனம் இறங்கிய பரவைநாச்சியார் சமாதானமடைந்தார். பின் சுந்தரர் இனிமையாய் இல்லறம் நடத்தினார்.

கலிக்காமரின் கோபம்:
ஈசனையே தன் இச்சைக்காக தூது விடுகிறாரே? இவரெல்லாம் என்ன மனிதரென சுந்தரர்மேல் வெறுப்பு கொண்டார் ஏயர்கோன் கலிக்காமர். கலிக்காமரின் இந்த கோபத்தினை கேள்விப்பட்டார் சுந்தரர். தன் செயலுக்காக வருந்தினார். ஈசனிடம் கலிக்காமரின் கோபத்தினை போக்குமாறு வேண்டிக் கொண்டார். இவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க இறைவன் எண்ணினார். கலிக்காமருக்கு கொடிய சூலைநோயை வருவித்தார் ஈசர். தீயில் காய்ச்சிய வேல் உள்ளே குடைவதை போன்று பெரும் துயரம் அளித்தது, மிகவும் மனமுடைந்து ஈசன்திருவடியை விழுந்து வணங்கினார். வன்தொண்டரான சுந்தரராலன்றி இந்நோய் தீராதென கனவில் கூறி மறைந்தார் ஈசர். அதன்பின் சிலபூசலுக்கு பின் இருவரும் இணைபிரியா நட்புகொண்டனர்.

சேரமான்பெருமாள்:

இந்ந அடியார் சுந்தரரின் உற்ற நண்பராவார். இவரோடு இணைந்து சுந்தரர் ஆற்றிய பணிகளை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.

https://trichyparthi.blogspot.com/2020/05/36.html

முதலை உண்ட பாலகன்:

சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்க விருப்பு கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார்.
அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், மறு வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து, நிகழக் என்ன காரணம் என வினவினார்.
நிகழ்ந்ததை அவ்வூரார் உரைத்தனர்.
அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார்.
சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி "எற்றான் மறக்கேன்" எனும் திருப்பதிகத்தைப் பாடினார்.
அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.
அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.
சுந்தரர் பின் இத்தலத் திருக்கோயிலை அடைந்து, அருள்மிகு கருணாம்பிகையையும் அவிநாசியப்பரையும் வழிபட்டு, மலைநாடடைந்தார். திருவஞ்சைக்களம்  இறைவரை வணங்கி, "தலைக்குத் தலைமாலை" என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். சுந்தரருக்கு அருள்புரிய விரும்பிய ஈசர், சுந்தரரை திருக்கயிலாயத்திற்கு  அழைத்து வர இந்திரனையும், தேவகணங்களையும் பணித்தார்.தேவர்கள் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்து இறைவனது விருப்பத்தை தெரிவித்தனர். சுந்தரர் இறையாணையை ஏற்று சேரமானை மனத்தில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின் மேல் ஏறி "தானெனை முன் படைத்தான்" என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக் கயிலாயம் சென்றார்.சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்த சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டுகளித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினை ஓதி அக்குதிரையின் மீது அமர்ந்து வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்குவாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர். சுந்தரர் தான் முன்சென்று ஈசனிடம், தம் நண்பான சேரனின் வருகையும் தெரிவித்து விண்ணப்பித்தார். ஈசன் சேரனை உள்ளே அழைத்து"இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?"என சேரனிடம் கேட்க, அதற்கு அவர் ஈசன் முன்னரே திருக்கயிலாய ஞானஉலாவை இறைவன் முன்னே கயிலாயத்திலேயே இயற்றி பாடும் பெறும்பேறு பெற்றார்(சுந்தரர் புராணத்தில் இவற்றை விரிவாய் காண்போம்) அதன்பின் சுந்தரரோடு சேரமானும் சிவகணங்களாய் திகழ்ந்து திருக்கயிலாயத் தொண்டு புரிந்தனர். 

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம்: Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#சுந்தரமூர்த்திநாயனார்
#அறுபத்துமூன்றாம்நாள்

🙏🙏🙏🙏🙏🙏முற்றிற்று 🙏🙏🙏🙏🙏🙏


Saturday, 30 May 2020

இசைஞானி அம்மையார்

தினம் ஒரு அடியார்-62

இசைஞானி அம்மையார் புராணம் :

சோழவளநாட்டின் திருவாருர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் கமலாபுரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் ஆதிசைவர் மரபில் பிறந்து சடைய நாயனாரை மணந்தார். 
இவரது பூசைநாள் : சித்திரை-சித்திரை

[ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் 
 அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்  
 இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் 
 மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்]

முடிவில்லாத பெருமைமிக்க சடையனாரை மணந்து, எவ்வகையானும் அழிக்க முடியாத மூன்று கோட்டைகளை சினந்து அழித்த சிவபெருமான் ஆட்கொண்டருளிய நம்பியாரூரன் எனும் சுந்தரரை பெற்றெடுத்த சிறப்பினையுடையவர் இசைஞானியர் ஆவார். இதனாலேயே இவர் அடியாராய் வைத்து போற்றக்கூடிய நிலையில் சேக்கிழார் போற்றுகிறார்.

"இசைஞானி காதலன் திருநாவலூர்கோன் அன்னவனாம் 
ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக்கன்பராவரே"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம்: Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#அறுபத்துஇரண்டாம்நாள்
#இசைஞானிஅம்மையார்நாயனார்


Friday, 29 May 2020

சடைய நாயனார்

தினம் ஒரு அடியார்-61

சடைய நாயனார்:

இவ்வுலகில் நிறைய ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.எல்லாமே இறைவனைப் பற்றித்தான் பேசுகின்றன. 

 தாதமார்க்கம்(தாச மார்க்கம்), சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்,
சன்மார்க்கம் என்பன சிவபிரானை அடையும் நன்மார்க்கங்கள்
ஆகும். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம்  என்ற
பெயராலும்     வழங்கப்     பெறுதல் உண்டு. 
இம்மார்க்கங்களில் சகமார்க்கத்தினை சுந்தர் பெருமானார் பின்பற்றினார். இந்நெறி யோகமார்க்கம் எனவும் கூறப்பெறும்.யோகம் என்பதற்குப் பொருள் ஒன்றுதல் என்பதாகும்.
அதாவது உயிரானது இறைவனோடு ஒன்றியிருப்பதே யோகநிலை. 
இறைவனோடு ஒன்றிவிடுகின்ற காரணத்தால் இறைவனுக்குத்
தோழமையாகின்ற அருள் கிடைக்கின்றது. எனவேதான்
இந்நெறி தோழமை நெறி எனப்படுகிறது. இந்நெறியை "உயிராவணம்"
என்று தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலும், "தேடுவேன்
தேடுவேன்"என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடலும் குறிப்பிடுகின்றன.

இத்தகைய சிறப்புமிக்க சகமார்த்தை கடைபிடித்து ஒழுகிய பார்புகழும் சுந்தரமூர்த்தி நாயனாரை நமக்கு அளித்தவர் சடையநாயனார் ஆவார்.
இவரது பூசைநாள்: மார்கழி திருவாதிரை
இவர் ஆதிசைவகுலத்தில் தோன்றியவராவார்.

[தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர்
 கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் 
 எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம் 
 நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ]

தம்முடைய தலைவராகிய சிவபெருமானையே தமக்கு தோழராய் கொண்டருளி பின் அவரையே தம் பரவையாரிடத்தூ தூதாக செல்லும்படி ஏவல் கொண்டருளியவரும், சேரமான் பெருமாளின் உற்ற நண்பருமாகிய நம்பியாரூரரை உலக உயிர்கள் உய்யும்பொருட்டு அளித்ததால் சடையரை நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் நிலையை அடைந்தார்.


"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்"  

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#சடையநாயனார்
#அறுபத்துஒன்றாம்நாள்

Thursday, 28 May 2020

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

தினம் ஒரு அடியார்-60

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள ஊர் ராஜேந்திரபட்டினம் இவ்வூர் அன்று திருஎருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்டது. இவ்வூரில் பாணர் மரபில் பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். 
இவரது பூசைநாள்: வைகாசி மூலம்

பாணர் மரபு:
சங்க இலக்கியங்கள் பலவகையான பாணர் சமுதாயங்களை காட்டுகின்றன. சங்ககாலத்தில் நாடோடிப்பாடகர்களாகவும், பல்வேறு கலைஞர்களாகவும் இருந்துள்ளனர்.
பாணர்கள் ஊர்ஊராய் சென்று பாடிப் பிழைப்பவர்கள் என்பதனை பொருநராற்றுப்படை நேரடியாகவே சுட்டுகிறது. சங்கநூல்களில் ஆற்றுப்படை நூல்களே அலைகுடி(நாடோடி)கள் மற்றும் நிலைகுடிகளைப்பற்றி விரிவாய் கூறுகிறது! வையாற்றின் நீர்த்துறைகள் தோறும் பாணர் அமர இருக்கைகள் இருந்துள்ளது! இதனை பரிபாடலும், மதுரைக்காஞ்சியும் கூறுகிறது! இக்குழுவினர் சேர, சோழ, பாண்டியரை விட குறுநிலமரபான வேளிர்களையும் நிலக்கிழார்களையுமே நாடி வாழ்ந்துள்ளனர். தங்கள் பயணங்களில் கானகர், குறவர், கொடிச்சியர், எயினர் போன்றவர்களிடம் உண்டு, உறவாடி வாழ்ந்துள்ளனர். இன்றைய நாடோடிக் குழுக்கள் போல் தம் பணியை சுருக்காமல் வேளாண்மை, தூதுசெல்லுதல், நெசவு போன்ற பல பணிகளை செய்துள்ளனர். இவர்களின் வாய்மொழியினாலேயே பல எளிய கதாநாயகர்களின் மக்களிடையே பரவின. இன்றும் தென்தமிழகத்தில் அழகர் மாட்டுக்காரர்கள் வள்ளி, தெய்வானை கதைகளையும், வடதமிழகத்தில் தேசிங்குராஜன் கதை, காத்தவராயன், முத்துப்பட்டன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற சிறுதெய்வங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் கூத்துக்கலைஞர்களே அன்றைய பாணர்கள்.

திருஎருக்கத்தம்புலியூரில் நிலைபெற்று வாழ்ந்து வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் சிவபெருமானின் பெருமைகளை தன் யாழின் இசையால் பரப்பினார், வளம்மிக்க சோழநாடு எங்கும் சென்று அனைத்து கோவில்களிலும் தம் யாழிசையால் ஈசனின் பெருமைகளை பாடினார். திருநீலகண்டரின் இசையால் மனம் பறிகொடுத்த மதுரையம்பதி இறைவன் சொக்கன் தம் பக்தர் கனவுகளில் தோன்றி திருநீலகண்டரை அழைத்துவருமாறு பணிக்க அவரும் தன் மனைவி மதங்கசூளாமணியாருடன் மதுரை வந்து
இறைவரது விருப்பப்படி பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் புகுந்திருந்து அவரது மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். தரையினில் குளிர்ச்சியினால் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும், எனவே பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் அசரீரி வாக்கினால் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப் போற்றினார்.அதன்பின் தேவர்கள் போற்றும்படி பல சிவத்தலங்களை அடைந்து தியாகராஜப் பெருமானை தரிசிக்க எண்ணி ஆரூர் வந்தடைந்தார்.

மெய்மறந்து சிவனின் புகழை தம் யாழின் இசையால் பாடினார்.பாணரது இன்னிசைக்கு உவந்து ஆரூர் அண்ணலார், பாணர் உட்சென்று வழிபட, மூடியிருந்த  வடதிசையில் வேறொரு வாயிலை உண்டுபண்ணினார். பாணர் அவ்வழியே புகுந்து வணங்கினார்.
மூலஸ்தானமாகிய கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி சிலகாலம் அங்கேயே தங்கியிருந்து அதன்பின் திருவாரூரை விட்டு நீங்கி பலதிகளை சென்று வணங்கினார்.
அதன்பின் ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தரை வணங்க விரும்பி சீகாழிப்பதியை அடைந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் வீற்றிருக்கும் பல திருத்தலங்களை அடைந்து வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வந்த யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூடிய  அடியார் திருக்கூட்டத்துடன்  பெருஞ்சோதியினுள் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்று,
இறைவன் திருவடிநிழலை அடைந்தார்.

"திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#திருநீலகண்டயாழ்ப்பாணர்
#அறுபதாம்நாள்

Popular Posts In This Blog